மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, இந்தியாவை உலகளாவிய அறிவு வல்லரசாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
திரிபுரா மாநிலத் தலைநகர் அகர்தலாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் 13-ஆவது பட்டமளிப்பு விழா இடம்பெற்றது. இதில் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நமது நாட்டின் பண்டைய கல்வி முறையானது, நல்ல ஆளுமைகளை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்தியது. அத்துடன், இயற்கையோடு இணைந்து வாழவும், அனைவரையும் மதிக்கவும் மக்களுக்கு கற்றுக் கொடுத்தது.
நடைமுறை சார்ந்ததாகவும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாகவும் நமது கல்வி முறை இருந்தது. கல்வி என்பது, தொடர்ச்சியான கற்றல் செயல்முறையாகக் காணப்பட்டது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையும் அதேபோன்ற அம்சங்களைக் கொண்டதாகப் பார்க்கப்படுகிறது. இது இந்தியாவை உலகளாவிய அறிவு வல்லரசாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. மேலும், நமது கல்வி முறையில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டு வர முயல்கிறது.
இளைஞர்கள் பெரிய அளவில் கனவு காண வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வலியுறுத்தியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அவர் கூறியதுபோல மாணவர்கள் ஓர் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு அதை அடைய கடுமையாகப் பாடுபட வேண்டும்.
நமது நாட்டின் மக்கள்தொகையில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள். அவர்களின் ஆற்றலை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களிடையே தொழில்முனைவோரை உருவாக்குவதற்கான சரியான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.