திருமறைக் கலாமன்றத்தின் புதிய கெளரவ இயக்குநராக அருட்தந்தை அ.பி.ஜெயசேகரம் அடிகள் நியமிக்கப்பட்டார்.
இன்று காலை திருமறைக் கலாமன்ற தினத்தைச் சிறப்பிக்கும் முகமாக இடம்பெற்ற திருப்பலியின் நிறைவில் நடந்த ஒன்றுகூடலில் இந்த அறிவிப்பை பிரதி இயக்குநர் யோ.யோண்சன் ராஜ்குமார் அவர்கள் விடுத்தார்.
இதற்கு முன்பாக 50 ஆவது குருத்துவப் பணியை நிறைவு செய்துள்ள ஜெயசேகரம் அடிகள் திருமறைக் கலாமன்றத்தால் கெளரவிக்கப்பட்டார்.இதன் போது மன்றத்தின் நிர்வாக இயக்குநர் அருள்பணி ஜெறோ செல்வநாயகம் அடிகள் பொன்னாடை போர்க்க,செயலாளர் சி.எம்.நெல்சன் மாலை அணிவித்தார்.
எமது ஸ்தாபக இயக்குநர் நீ.மரியசேவியர் அடிகளாரின் மறைவுக்குப் பின்னர் பலமாதகாலமாக நிலவி வந்த வெற்றிடம் இன்று நிரப்பப்பட்டுள்ளது.ஸ்தாபக இயக்குநர் மரிய சேவியர் அடிகளாரின் பிறந்தநாளில் இது நிறைவேறியுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். ஸ்தாபக இயக்குநர் அவர்களின் சிந்தனைகளையே ஜெயசேகரம் அடிகளாரும் கொண்டுள்ளமை இன,மத,மொழி வேறுபாடுகளைக் கடந்து கலை என்ற தளத்தில் மனிதர்களை ஒன்றிணைத்து பயணிக்கும் திருமறைக் கலாமன்றத்தின் பணிகள் இனிதே தொடர மேலும் வலுச்சேர்க்கும்.
எமது மன்றத்தின் கெளரவ இயக்குநராக பணியேற்றுள்ள அருட்கலாநிதி அ.பி.ஜெயசேகரம் அடிகளாருக்கு எமது மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இன்றைய நன்றித் திருப்பலியை எமது உதவி நிர்வாக இயக்குநர் அருள்பணி அன்ரன் ஸ்ரிபன் அடிகள் சிறப்பாக ஒப்புக்கொடுத்தார். அதனைத் தொடர்ந்து மன்ற அலுவலக முன்றலில் மன்ற க் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.தொடர்ந்து காலை உணவுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.இந்நிகழ்வுகளில் மன்ற அங்கத்தவர்கள்,ஆதரவாளர்கள் உட்பட பெருமளவானோர் கலந்து சிறப்பித்தார்கள்.