வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா, காட்டுமல்லி, நகர்ப்புறம், ஈட்டி, ஜீவா, கலகலப்பு-2 என அரை டஜன் படங்களை கைப்பற்றி விட்டார். இந்த நேரம் பார்த்து நஸ்ரியாவும் நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டதால், அது ஸ்ரீதிவ்யாவுக்கு இன்னும் சாதகமாகி விட்டது. அதனால், மேலும் சில புதிய படங்கள் அவர் கால்சீட் டைரியை நிரப்பி வருகின்றன.
அதனால், தனது தாய்மொழியான தெலுங்கு படங்களை கூட தவிர்த்து விட்டு கோடம்பாக்கத்தில் முழு நேர கலைச்சேவை ஆற்றி வருகிறார் ஸ்ரீ திவ்யா. மேலும், தான் நடித்து வரும் அத்தனை படங்களுமே தற்போது படப்பிடிப்பு நடந்து வருகின்றன என்பதால், பத்து நாள், பதினைந்து நாள் என ஒவ்வொரு படத்திற்கும் கால்சீட்டை பிரித்துக்கொடுத்து நடிக்கும் ஸ்ரீதிவ்யா, சில நாட்களில் இரவு, பகலாக கூட கண்விழித்து நடித்துக்கொடுக்கிறாராம் திவ்யா.
அப்படி அதர்வாவுடன் நடித்து வரும், ஈட்டி படத்தில் 3 நாட்களாக இரவு, பகலாக நடித்தாராம் ஸ்ரீதிவ்யா, அந்த நாட்களில் இரண்டு மணி நேரம்தான் அவர் அதிகமாக தூங்கியிருப்பாராம். ஆனபோதும், முகத்தில் எந்தவித சோர்வையும் காட்டாமல் சுறுசுறுப்பாக நடித்துக்கொடுத்தாராம். அவரது இந்த வேகத்தைப்பார்த்த ஈட்டி படக்குழு, படத்தில் அதர்வாதான் ஈட்டி மாதிரி பாய்வார் என்று பார்த்தால், ஸ்ரீதிவ்யா பாய்ச்சலில் அவரையும் மிஞ்சி விடுவார் போலிருக்கு என்கிறார்கள்.