எல்.கே.ஜி பயின்றுவரும் `தல அஜித்தின்’ அடையாள அட்டையின் படங்கள் சமூகவலைதளங்களில் பதிவிடபட்டதால் அஜித் ரசிகர்கள் உட்பட பலபேர் பார்த்து மதுரைவீரன்-ஜோதிலட்சுமி தம்பதியரை வாழ்த்தி வருகிறார்கள்.
அபிமான நடிகரின் பெயரை தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டும் பெற்றோரை பார்த்திருக்கிறோம். ஆனால், அந்த அபிமான நடிகரின் அடைமொழியையும் சேர்த்து ரிகார்டிகலாக சூட்டி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார் மதுரையைச் சேர்ந்த மதுரை வீரன்.
நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரான மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மதுரை வீரன்-ஜோதிலட்சுமி தம்பதி. இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். அஜித் நடித்த ஒரு படத்தையும் தவறவிட்டதில்லை. அஜித் மீதான ஈர்ப்பு 2013-ம் ஆண்டு பிறந்த தங்கள் மகனுக்கு ‘தல அஜித்’ எனப் பெயர் சூட்டும் அளவுக்குச் சென்றது.
இரண்டாவதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு `அஜித்தா’ எனப் பெயர் சூட்டினார்கள். இந்தப் பெயர்களை பேச்சுக்காக வைத்துக்கொள்ளாமல் அரசு ஆவணங்களான பிறப்பு சான்றிதழ் முதல் ஆதார் அட்டை, குடும்ப அட்டை என அனைத்திலும் `தல அஜித்’ என்றே அதிகாரபூர்வமாகப் பதிவு செய்துள்ளார்.
தற்போது தனியார் பள்ளியில் எல்.கே.ஜி பயின்றுவரும் ‘தல அஜித்தின்’ அடையாள அட்டையின் படங்கள் சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்டதால் அஜித் ரசிகர்கள் உட்பட பல பேர் பார்த்து மதுரைவீரன்-ஜோதிலட்சுமி தம்பதியரை வாழ்த்தி வருகிறார்கள்.
”அஜித் என்று மட்டும் வைக்காமல், ‘தல அஜித்’ என்று அடைமொழியுடன் ஏன் பெயர் வைத்தீர்கள்?” என்று மதுரைவீரன்-ஜோதிலட்சுமி தம்பதியிடம் கேட்டோம், ”தல’ன்னாலே அஜித் தானே. அவர் பெயர் வைக்கணும்னு முடிவு பண்ணிட்டோம். அதை முழுசா வச்சுட்டோம். எங்க ரெண்டு பேருக்கும் அஜித்தைப் பிடிக்கும். அவரை நடிகர் என்பதைத் தாண்டி தன்னம்பிக்கையுடன் பல்வேறு துறையிலும் ஈடுபாட்டோடு இருப்பதும் பிடிக்கும். பைக் ரைடர், கார் ரேஷர், மோட்டார் மெக்கானிக், பல்கலைக்கழக மாணவர்களுக்கான குட்டி விமான ஆம்புலன்ஸுக்கு ஆலோசகர், துப்பாக்கி சுடும் வீரர் எனப் பல துறைகளில் செயல்படுகிறார். மேலும், தன்னுடைய வாழ்வில் வரும் பல தடைகளையும் தாண்டி சாதித்து வருகிறார். அவர் பெயரைச் சொல்லும்போதே உற்சாகமாக இருக்கிறது. அதனால்தான் எங்கள் மகனும் தன்னம்பிக்கையோடு வளர்ந்து சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தல அஜித் என்றும் மகளுக்கு அஜித்தா என்றும் பெயர் சூட்டினோம். இப்போது அதற்காக எல்லோரும் பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது” என்றனர்.