அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயால், தனுஷ் பட நடிகை அவதிப்பட்டு வருகிறாராம்.தனுஷுடன் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை ரிச்சா கங்கோபத்யா. இவர் அமெரிக்காவில் எம்.பி.ஏ படிப்பதற்காக சினிமாவில் இருந்து முற்றிலும் ஒதுங்கி விட்டார். ஜோ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணம் சென்ற வருடம் இறுதியில் நடைபெற்றது.
ரிச்சா தற்போது கணவருடன் அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் வசித்து வருகிறார். அங்கு தற்போது காட்டுத்தீ காரணமாக பெரிய சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அந்த பகுதியில் காற்றின் தரமும் குறைந்து இருக்கிறது. அதனால் மூச்சு விடவும் மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். இதனால் போர்ட்லேண்ட் மேயர் அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருக்கிறார்.
ரிச்சா இதன் காரணமாக வீட்டிலேயே தான் இருக்கிறார். காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அவர் வெளியில் செல்லாமல் இருக்கிறார். மேலும் வீட்டுக்கு உள்ளும் புகை அதிகம் வருகிறது என்பதால் மூச்சுவிடுவதில் அதிகம் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது.
இது பற்றி டுவிட்டரில் ரிச்சா கூறி இருப்பதாவது: “காற்றின் தரம் இங்கு மிக மோசமாக இருக்கிறது. புகை வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டது.
அனைத்து இடங்களிலும் ஏர் பியூரிபையர்கள் விற்று தீர்ந்து விட்டன. நாங்கள் வீட்டிலேயே மூச்சு விட முடியாத நிலையில் இருக்கிறோம். காற்று இல்லாமல் இந்த புகை காரணமாக வரும் தலைவலியுடன் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்” என குறிப்பிட்டிருக்கிறார்.