இறந்துவிடுவோமோ இல்லை பிழைப்போமா? நாளை கண் விழிப்போமா?
2012-ல் கருப்பைப் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டதை அறிந்தவுடன் நடிகை மனிஷா கொய்ராலா ஒரு நிமிடம் திணறிப் போனார். எதிர்காலம் மீதும் வாழும் நாள்கள் மீதும் பெரும் பயம் ஏற்பட்டன.
பயம் தெளிந்தவுடன் தீர்வு என்ன என்று யோசித்தார். புற்றுநோயைக் கண்டு விலகி ஓடாமல் அதை நேரடியாக எதிர்கொள்ள ஆயத்தமானார். முட்டி மோதுவோம், என்ன ஆகிறது என்று பார்ப்போம் என்கிற மனநிலைக்கு மாறினார்.
உடனடியாக அமெரிக்காவுக்குச் சென்றார். ஒரு வருடம், மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மையத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல் 11 மணி நேர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்திக்கொண்டார். அடுத்த ஆறு மாதங்களுக்கு 18 பகுதிகளாக கீமோதெரபி சிகிச்சை அவருக்கு நடைபெற்றது.
பணம் தண்ணீராகச் செலவானது. வலிகள், போராட்டங்கள் அதிகமாகின. மனத்தளவில் நம்பிக்கையில்லை, உடல் உதவி செய்யவில்லை, சக்தி முழுவதையும் இழந்தது போல உணர்ந்த நிலையில் அவருடைய குடும்பம் பெரிய பலமாக இருந்திருக்கிறது. அதன் கையைப் பிடித்துக்கொண்டே புற்றுநோயை தன் உடலில் இருந்து விரட்டி அடித்துள்ளார்.
நேபாளத்தில் பிறந்தவர் மனிஷா கொய்ராலா. 1950களின் இறுதியில் இவருடைய தாத்தா, நேபாளத்தின் பிரதமராகப் பணியாற்றியவர். சிறுவயதில் இந்தியாவின் வாரணாசியில் உள்ள தன் பாட்டியின் வீட்டில் வளர்ந்துள்ளார். பத்தாம் வகுப்பு வரை அங்கு படித்துவிட்டு பிறகு தில்லி, மும்பையில் வாழ்ந்துள்ளார். 1989-ல் ஒரு நேபாளப் படத்தில் பொழுதுபோக்குக்காக நடித்தார். தில்லியில் ராணுவப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது மாடலிங் வாய்ப்புகள் வந்துள்ளன. கேமரா முன்னால் நின்றபிறகு நடிப்பு ஆசை வந்துள்ளது. உடனே மும்பைக்கு ஜாகையை மாற்றியுள்ளார்.
சுபாஷ் கையின் செளதாகர் படத்தில் நடித்தார். அடுத்தடுத்து சில படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. 1994-ல் வெளியான விது வினோத் சோப்ராவின் 1942: ஏ லவ் ஸ்டோரி படமும் அதன் அழகான பாடல்களும் மனிஷாவை இந்தியா முழுக்கப் பிரபலமாக்கின. ஒரே நாளில் நம்பமுடியாத புகழை அடைந்தார்.
உடனடியாக மணி ரத்னத்தின் பம்பாய் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்ப் படம் என்பதால் சில தயக்கங்களுக்குப் பிறகே நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த இரு படங்களும் இவரை நட்சத்திரமாக்கின. இந்தியன், முதல்வன், பாபா, ஆளவந்தான் எனத் தமிழ்ப் படங்களில் அடிக்கடி இவரைப் பார்க்க முடிந்தது.