விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெ. விருமாண்டி இயக்கியுள்ள படம் – க/பெ. ரணசிங்கம். ஜிப்ரான் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.
இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. சமீபகாலத் தமிழ்ப் படங்களில் இடம்பெறும் விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்னைகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு எதிராக சாதாரண மக்கள் போராடுவது போன்ற காட்சிகளே டீசரில் அதிகமாக இடம்பெற்றுள்ளன.
க/பெ. ரணசிங்கம் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜீ பிளெக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 2 முதல் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் நேரடியாகப் பார்ப்பதற்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 199 செலுத்தினால் க/பெ. ரணசிங்கம் படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்க முடியும்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ட்விட்டரில் கூறியதாவது:
ஓடிடியில் எந்தப் படத்தையும் நேரடியாகப் பார்க்க ரூ. 199 வசூலிப்பது மிக அதிகமானது. சந்தா கட்டியதன் மூலம் இலவசமாகப் படம் பார்க்கவே நம் மக்கள் தயாராகியுள்ளார்கள். கட்டணம் நிர்ணயிக்கப்பட்டால் தவிர்க்க முடியாத, சுவாரசியமான படத்துக்கு மட்டுமே கட்டணம் செலுத்துவார்கள். இந்தப் புதிய கட்டண முறை எப்படி வரவேற்பைப் பெறுகிறது என்று பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
திரையரங்கில் நான்கு பேர் படம் பார்ப்பதற்கான டிக்கெட் கட்டணம், பார்க்கிங், ஸ்னேக்ஸ் எல்லாவற்றுக்கும் சேர்த்து ரூ. 2000 செலவாகும். எனவே இந்தக் கட்டணம் சரிதான் என்று ஒருவர் பதில் அளித்தார். இதற்கு தனஞ்ஜெயன் கூறியதாவது: புதிய படங்களை இலவசமாகப் பார்த்து பழகிய மக்கள் துரதிர்ஷ்டவசமாக இந்தக் கோணத்தில் பார்க்க மாட்டார்கள். அக்டோபரில் இதன் முடிவு தெரியும் என்றார்.