பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பா.ரஞ்சித் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் ‘மெட்ராஸ்’ ரஜினியுடன் ‘கபாலி, ‘காலா’வை இயக்கி தமிழின் முன்னணி இயக்குநரானார்.
‘காலா’வுக்குப் பிறகு பீகார், ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின மக்களின் உரிமைகளை ஆங்கிலேயர்களிடமிருந்தும் உள்ளூர் நில உடமையாளர்களிடமிருந்தும் மீட்டுத்தர போராடிய பழங்குடியினத் தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க அறிவிப்பும் வெளியாகி, பின்பு இடையில் நின்று போனது.இந்நிலையில், ஆர்யா – கலையரசன் நடிப்பில் ‘ஆர்யா 30’ படத்தை பா.ரஞ்சித் இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. குத்துச்சண்டையை மையப்படுத்திய இக்கதையில், ஆர்யாவும் கலையரசனும் உடம்பை மெருக்கேற்றிய வீடியோக்களும் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி வைரலாகின.
சமீபத்தில்தான், ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், இயக்குநர் ரஞ்சித் மற்றும் பாக்ஸிங் பயிற்சியாளர் முரளியுடன் பயிற்சியெடுக்கும் படத்தை வெளியிட்டு, “இந்த அற்புதமான படத்திற்கு நன்றி ரஞ்சித் சார். இதைவிட சிறந்த விளையாட்டுப் படத்தை நான் கேட்டதில்லை. பாக்ஸிங் பயிற்சி கொடுத்த முரளி சார் நம் அனைவரை விடவும் வேகமாக இருந்தார்” என்றதோடு ’நீங்கள் இல்லாமல் இந்தப் படம் கற்பனை செய்ய முடியாததாக இருந்திருக்கும்’ என்று தயாரிப்பாளரையும் பாராட்டினார். இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் தலைப்பையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.
’சார்பட்டா பரம்பரை’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் தலைப்பை வெளியிட்டு, ”இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல… இது நம்ப ஆட்டம்… எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவணும்… ஏறி ஆடு.. கபிலா” என்ற வசனத்தையும் சேர்த்துள்ளார். போஸ்டரில் ஆர்யா முருக்கேறிய உடலாலேயே மிரட்டல் தருவதாக ரசிகர்கள் ரியாக்ட் செய்து வருகின்றனர். அதேநேரத்தில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஃபீரியட் படம் போல் காட்சியளிக்கிறது என்பதால், இன்னும் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன.