பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை பற்றி நடிகை அலியா பட் சொன்ன சில கருத்துகளால், அவருக்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வரும் ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தில் அலியா பட் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அவரை ஏன் இப்படத்தில் நடிக்க வைக்கிறீர்கள் என்று ராஜமவுலிக்கு சிலர் கண்ட னம் தெரிவித்தனர். எனவே, படத்தில் இருந்து அலியா பட் நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் சம்பந்தப்படாத காட்சிகளை மட்டும் ராஜமவுலி படமாக்கி வந்தார்.
இந்நிலையில் திடீரென கொரோனா லாக்டவுன் அமல்படுத்தியதால், ‘ஆர்ஆர்ஆர்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. லாக்டவுன் தளர்வுக்கு பிறகு ஐதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் அலியா பட் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், நேற்று ‘ஆர்ஆர்ஆர்’ படப் பிடிப்பில் பங்கேற்க மும்பை யில் இருந்து ஐதராபாத்துக்கு சென்ற அலியா பட், காரில் அமர்ந்து இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு, ‘ஒருவழியாக நான் ‘ஆர்ஆர்ஆர்’ ஷூட்டிங்கில் பங்கேற்கிறேன்’ என்று பதிவு வெளியிட்டுள்ளார்.