சூர்யா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் அமேசான் ப்ரைமில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான திரைப்படம். இந்த திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது.
பல்வேறு பாராட்டுக்களை பெற்ற இத்திரைப்படம் சமீபத்தில் கலிஃபோர்னியாவில் நடைபெற உள்ள 78வது கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்கிற பிரிவில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது அதற்கும் ஒருபடி மேலாக ஆஸ்கர் ரேஸில் சூரரைப்போற்று பங்குபெறவுள்ளது.
இந்த முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம். அந்த வரிசையில் பொதுப்பிரிவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. இந்தப் போட்டியில் தேர்வாகி பரிந்துரை பட்டியலில் இடம் பெறவேண்டும். அதனைத் தொடர்ந்து யார் வெற்றியாளர் என்பதை ஆஸ்கர் மேடையில் அறிவிப்பார்கள். இந்தப் பொதுப்பிரிவுப் போட்டியில் ‘சூரரைப் போற்று’ திரையிடலுக்காக அகாடமி திரையிடல் அறையில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. இந்த அறையில் உள்ள படத்தை ஆஸ்கர் குழு உறுப்பினர்கள் பலரும் பார்த்து எந்தெந்த பிரிவில் இந்தப் படத்தைத் தேர்வு செய்யலாம் என்பதை முடிவு செய்வார்கள்.
சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கர் ரேஸில் பங்குபெறவுள்ளது என்ற செய்தியால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.