எந்திரன் கதை தொடர்பான வழக்கில் இயக்குநர் ஷங்கருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்த படம் எந்திரன் இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் கடந்த 1996ம் ஆண்டு உதயம் என்ற பத்திரிக்கையில் ஜூகிபா என்ற தலைப்பில் தொடர்கதை எழுதினேன் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குநர் ஷங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை ரத்து செய்ய மறுத்து, இந்த வழக்கில் இயக்குநர் ஷங்கருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதாக உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ஆரூர் தமிழ்நாடான் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு எழும்பூர் 2வது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் ஷங்கரும் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. மேலும் கடந்த 11 ஆண்டுகளாக நேரில் ஆஜராகவில்லை என்ற புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இயக்குநர் ஷங்கருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் விசாரணையை வரும் பிப்ரவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் புகார்தாரர் தரப்பு சாட்சி விசாரணை நடைபெறும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்