திரைப்பட நடிகை, சின்னத்திரை நடிகை, தயாரிப்பாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என பன்முக திறமையுடன் வலம் வரும் மூத்த நடிகை ராதிகா சரத்குமாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் அண்மையில் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவருடைய கணவரும், நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமார் அவர்களுக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு வைத்தியரின் அறிவுரையை ஏற்று சிகிச்சையைத் தொடர்ந்தார்.
அதனையடுத்து கொரோனா தடுப்பூசியை முதல் தவணையாக செலுத்திக்கொண்டார். இதன்போது திருமதி ராதிகா சரத்குமாரும் கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக் கொண்டார்.
அண்மையில் காசோலை மோசடி வழக்கு தொடர்பாக சென்னை சிறப்பு நீதிமன்றம் இவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் ஏற்பட்டதால் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவரின் அறிவுரையின்படி மீண்டும் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை தொடர்கிறார்.
தமிழ் திரை உலகில் மூத்த நடிகை ராதிகாவை தொடர்ந்து, ‘ஜகமே தந்திரம்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கும் மலையாள நடிகையான பவித்ர லட்சுமிக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவரின் அறிவுரைப்படி வீட்டில் தனிமை படுத்திக்கொண்டு சிகிச்சையை தொடர்வதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.