Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் வெற்றிமாறனின் நவீன குருகுலம்

வெற்றிமாறனின் நவீன குருகுலம்

2 minutes read

‘இளம் படைப்பாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ஓராண்டு காலம் பயிற்சிகள் அளிக்கப்படும்’ என சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம் என்ற புதிய திரைப்பட ஆய்வகத்தை தொடங்கியிருக்கும் அதன் தலைவரான இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறைக்கான வீரியமிக்க படைப்பாளிகளின் அடையாளமாக கருதப்படுபவர் இயக்குனர் வெற்றிமாறன். 

இவரின் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் போன்ற திரைப்படங்களும், இவரின் தயாரிப்பில் உருவான விசாரணை, லென்ஸ் போன்ற திரைப்படங்களும் தமிழ் திரையுலக இரசிகர்களின் இரசனையை சர்வதேச அளவிற்கு மேம்படுத்தி வருகிறது. 

இவரது படைப்புகளுக்கு தேசிய விருதும், சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபற்றி விருது பெற்று வருவதும், வணிகரீதியாக வெற்றி பெறுவதும் இதற்கு சாட்சி.

இவர் தன்னை மட்டும் செதுக்கி கொள்ளாமல், அடுத்துவரும் தலைமுறையையும் வீரியமிக்க விதைகளாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஊடகத் துறையிலும், தமிழக பண்பாட்டு மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் மீது தீரா பற்று கொண்டுள்ள முனைவர் இராஜநாயகம் மற்றும் சமூக ஆர்வலர் வெற்றி துரைசாமி ஆகியோரின் துணையுடன் ‘சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம்’ என்ற “உண்டு உறைவிட” பாடசாலையை தொடங்கியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில்,

‘தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் 21 முதல் 25 வயது வரை உள்ள, முதல் தலைமுறை பட்டதாரி மற்றும் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை உள்ள இளைஞர்களை, பல்வேறு கட்ட படிநிலை தேர்வுகளின் மூலம் தெரிவு செய்து, அவர்களுக்கு ஓராண்டு எங்களுடைய “உண்டு உறைவிட” பாடசாலையில் பயிற்சி அளித்து, தரமான படைப்பாளியாக உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம். 

இதற்கு நான் தலைமை வகித்தாலும், இத்துறையில் அனுபவமிக்க பல்வேறு துறைசார் நிபுணர்களின் வழிகாட்டலும், பயிற்சியும் வழங்கவிருக்கிறோம். ‘ என்றார்.

இன்றைய சூழலில் கெமரா வசதியுடன் கைபேசி வைத்திருக்கும் அனைத்து இளைய தலைமுறையினரும் படைப்பாளிகள் தான் என்றாலும், திரைத்துறை குறித்த ஏராளமான கல்வி நிறுவனங்கள் அறிமுகமாகி சேவை அளித்து வந்தாலும், திரைத்துறையில் சாதித்திருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் போன்றவர்கள் தலைமையில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த நவீன குருகுலத்தில் பயில்பவர்கள் எதிர்காலத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த ஆளுமையாக திகழக் கூடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 

ஏனெனில் இவர்கள் சினிமாவை எப்படி உருவாக்குவது என்பதை அதற்கே உரிய தொழில்நுட்பத்துடன் பயிற்சி அளிக்காமல், தமிழ் பண்பாட்டு மற்றும் கலாச்சார தளங்களின் பாரம்பரியத்தை,  படைப்பின் ஊடாக வழங்கும் நுட்பத்தையும் கற்பிக்கவிருக்கிறார்கள்.  

இதனால் இவர்களிடமிருந்து ஓராண்டிற்குப் பிறகு வீரியமிக்க படைப்பாளிகள் உருவாவார்கள் என நம்பிக்கையுடன் காத்திருப்போம். 

இதனிடையே இந்நிறுவனத்திற்கு இலங்கைத் தமிழர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்கள் எதிர்பார்க்கும் தகுதியிருப்பின் அவர்களுக்கும்  கற்பிக்கப்படும் என்றும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More