இந்தியாவில் முதன்முறையாக அம்பியுலன்சில் வைத்து குழந்தைகள்கடத்தப்படுவதை மையப்படுத்தி ‘துணிகரம்’ என்றொரு சர்வைவல் திரில்லர் ஜேனரிலான தமிழ் படம் தயாராகியிருக்கிறது.
ஏ4 மீடியா வொர்க்ஸ் டொக்டர் வீரபாண்டியன் மற்றும் டொக்டர் டெய்ஸி வீரபாண்டியன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘துணிகரம்’ அறிமுக இயக்குநர் பாலசுதன் எழுதி, இயக்கியிருக்கும் இந்த படத்தில் நடிகர்கள் வினோத், பரணி, டென்னிஸ், நடிகைகள் செம்மலர் அன்னம், சரண்யா ரவிச்சந்திரன் காயத்ரி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மெய்யேந்திரன் கெம்புராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷான் கோகுல் இசையமைத்திருக்கிறார்.
சர்வைவல் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த சிறிய பட்ஜட் படத்தை தமிழகம் முழுவதும் மே 6ஆம் திகதியன்று வெளியாகிறது.
இதனையடுத்து படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பால சுதன் பேசுகையில்,” துணிகரம்’படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்று யாருமில்லை.
முதன்மையான கதாபாத்திரம், முக்கியமான கதாபாத்திரம் என கதாபாத்திரங்கள்தான் இடம்பெற்றிருக்கிறது.
அம்பியுலன்சில் நடைபெறும் குழந்தைகள் கடத்தலை மையப்படுத்தி ஒரு இரவில் நடைபெறும் கதையாக ‘துணிகரம்’ உருவாகி இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தோன்றிய தலைப்புதான் இது.
பொருத்தமானதாக இருந்ததால் இதனையே படத்தின் தலைப்பாக சூட்டினோம்.
புதுமுகங்கள், சிறிய பட்ஜட் என்றாலும் திரைக்கதையை நேர்த்தியாக படமாக்கி இருக்கிறோம்.”என்றார்.
இன்றைய திகதியில் பெண் பிள்ளைகளைப் பாதுகாப்பது என்பது கடினமானதாகியிருக்கும் வேளையில், குழந்தைகள் கடத்தலையும், குழந்தைக் கடத்தல் நடைபெறும் தருணங்களில் பெற்றோர்கள் அதனை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பதையும் துணிகரம் படத்தில் விரிவாகப் பேசப்பட்டிருப்பதால் இந்த படத்திற்கு பார்வையாளர்களிடையே ஆதரவும், வரவேற்பும் கிடைக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.