வாழ்தலில் உயர்ந்து நிற்கின்றது
பேராற்றல் மிகு தீரங்கள்,
வலித்த பொழுதுகளில் நெஞ்சத்தில் வலிமை கொடுக்க
காலத்தின் கட்டளைகள் பிறப்பிக்கபடுகின்றன,
” யார் நாங்கள் “
ஏன்? எங்களை வேறாக்கிப்பார்க்கின்றீர்கள்…?
அப்போது தான் மேலும்
வலிக்கின்றது,
உடைந்த மனச்சுவர்களை
ஒருங்கிணைத்து எழும் போது
உக்கிய வார்த்தைகளை
எம்மீது தெளிக்காதீர்கள்,
உங்கள் இயலாமைகளை
எம்மீது திணிக்காதீர்கள்
உயிர் சிதைந்து வெளிப்புறப்பட்டு
வாழ்வின் ஒவ்வோரு நிமிடங்களையும்
வலிமையாக்கி
உலகத்தை நேசிக்கின்றோம்.
“சற்று நிதானியுங்கள்”
நாங்கள் சளைத்தவர்கள் அல்ல
சாகா வரம் பெற்ற
புனிதமும் விவேகமும்
கொண்டவர்கள்,
சூரியனை காட்டிலும்
உலகப்பெருந்திரள்
வலிமைகளை காட்டிலும்
மேலானவர்கள்,
நோய் கொண்ட
பலவீனமற்ற
வெளிப்பாடுகளாகவே
எங்களை கணிப்பது
உங்கள் எண்ணங்கள்,
காற்றில் மோதும்,
எமது சுவாசமும்
உமது சுவாசமும்
ஒன்றுதான் என்பதை
ஒருபோதும் மறந்து விடாதீர்கள்,
எங்கள் முயற்சிகள்
ஒருபோதும் வீணாகியதில்லை
எங்கள் வெற்றிகளே
எமது சிந்தனைகளை
நெறிப்படுத்துகின்றன,
“சற்று நில்லுங்கள்”
நிரந்தரத்தில் எல்லாமே
சாத்தியம்
அதை மனம் கொண்டு
நினைத்தால் மட்டுமே.
எங்கள் சிறகுகள்
விரிக்கப்பட்டு விட்டன
நீங்கள் திகைத்துக்கொண்டு
இருக்கின்றீர்கள்,
மாற்று வலு என்பது
எமது பலம்
ஒருபோதும் அதில்
ஏறி சவாரி செய்ய வேண்டாம்,
“புரிந்து கொள்ளுங்கள்”
சரிநிகராய் எழுந்து
தடையுடைத்து நிமிரும்
வல்லமை பெற்று நிற்பவர்கள்
நாம் என்பதை,
தே.பிரியன்