தந்தையே வரலாறு முழுவதும்
இப்படித்தான் இருந்ததா?
நாங்கள் எப்போதும்
அடிமையாகவே இருந்தோமா?
என் சிறு குழந்தையே
நீ ஆக்கிரமிப்பாளர்களையும் அறிவாய்
பாதுகாவலர்களையும் அறிவாய்
நம்முடைய மூதாதையர்
தம்மைத் தாமே ஆண்டனர்
எம் நிலத்தின் அரசுகளை
அந்நியர்கள் விழுங்கிக் கொண்டனர்
தந்தையே! போர்த்துக்கீசர்கள் போய்விட்டனர்
ஒல்லாந்தர்கள் வெளியேறிவிட்டனர்
பிரித்தானியர்களும் புறப்பட்டு விட்டனர்
ஆனாலும் இன்னும் ஏன்
ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறோம்?
அவர்கள் வெளியேற
இவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டனர்
அவர்கள் திருப்பித் தந்ததை
பின்னர் இவர்கள் பறித்துக்கொண்டனர்
இவர்களின் விடுதலைக்காகவும்
நாம் போராடினோம்
ஆனால் இவர்களோ
எமது சுதந்திரத்தைப் பறித்துக்கொண்டனர்.
இவர்கள் ஆக்கிரமிப்பை
ஐக்கியம் என்றனர்
விடுதலையை பிரிவினை என்றனர்
மகளே!
நம் தேசங்களை கலைத்து
ஒன்றுபட்ட நாட்டின்
சுதந்திரத்திற்காக உழைத்த உன்மூதாதையரை
இவர்கள் தம் தோளில் ஏந்திக் கொண்டாடுகையில்
அவர் நினைத்திரார்
உன்னைப்போலொரு குழந்தை
மறைக்கப்பட்ட நம் வரலாறு
குறித்து கேட்குமென.
0
தீபச்செல்வன்