நாடக அரங்கப்பணிகளை மக்கள் மயப்படுத்தியும் உயர்கல்விக்குரிய ஆய்வுப் பொருளாக்கியும் உயிர்ப்புடன் செயற்படும் ஓய்வுநிலைப் பேராசிரியர் சின்னையா மௌனகுரு அவர்களுக்கு டான் தொலைக்காட்சியின் 2020ஆம் ஆண்டுக்கான சாதனைத் தமிழன் விருது வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் உள்ள சீலாமுனை என்ற கிராமத்தில் சின்னையா முத்தம்மாள் ஆகியோரின் இரண்டாவது மகனாக 09.06.1943 இல் பிறந்தார் இவர்.
அமிர்தகழி மெதடிஸ்த மிஷன் பாடசாலை, வந்தாறுமூலை மத்திய கல்லூரி என்பவற்றில் கல்வி பயின்று பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டங்களையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டப்பின் கல்வி டிப்ளோமா பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
ஆசிரியராக, பலாலி ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராக,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளராக,கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவராக மற்றும் கலைப்பீடாதிபதியாகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
வடக்கில் 17 ஆண்டுகள்,கிழக்கில் 17 ஆண்டுகள் என முப்பத்து நான்கு ஆண்டுகள் கல்வி மற்றும் கலைப்பணி முன்னெடுத்த சிறப்பு இவருக்குரியது.
பேராசிரியர் சி.மௌனகுரு பல நூல்களை ஆக்கியும் ஈழத்தமிழன்னைக்கு வளம் சேர்த்துள்ளார். மேலும் இன நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி விருது, கலாகீர்த்தி போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.
தனது வாழ்வியல் பயண அனுபவங்களை டான் தொலைக்காட்சியில் வேரும் விருட்சங்களும் என்ற நிகழ்ச்சியின் மூலம் கடந்த வருடம் ஜனவரி தொடக்கம் தற்போது வரை ஒருவருடமாக வியாழக்கிழமை தோறும் இடம்பெற்ற நேர்காணல் பதிவின் மூலமாக ஆவணப்படுத்தியுமுள்ளார்.
இன்று நாடகத்துறைசார் துறையில் முதன்மைப் பங்களிப்பாளர்களாக திகழும் பலர் பேராசிரியர் மௌனகுருவின் மாணவர்களாவர்.
தனது பல்கலைக்கழக பட்டாய்வின் பின்னர் கிழக்கில் இவர் நிறுவிய அரங்க ஆய்வு கூடம் இவரது 3000 நூல்களையும் 1000 இறுவட்டுக்களையும் கொண்டமைந்த கலைக்கூடமாகத் திகழ்கிறது.
அருகிவரும் கூத்து கலைக்கு உயிர் கொடுக்கும் வகையில் அதனைப் பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வுப்பொருளாக்கியும் பிரயோக நிலையிலும் கற்றோரையும் மற்றோரையும் இணைத்து ஈழத்தின் நாடகத்துறையை வளர்த்தெடுத்து வருகிறார்.
இந்த உயர்விருதினை 2018இல் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களும், 2019இல் கலாநிதி நீ.மரியசேவியர் அடிகளாரும் பெற்றுள்ளமை சிறப்பிற்குரியது.