நான்கு சுவர்களுக்குள்
சுதந்திரமிழந்து போனது என் வாழ்க்கை
கனவுகளால் நிறைந்த நான்
அந்த சுவர்களுக்கு அப்பால்
எட்டிப்பாய்ந்து ஏதுமற்ற நாளைக்காக
அதன் நீட்சிக்காக நீண்ட நேர காத்திருப்பொன்றிகாக
காத்திருக்கிறேன்
வெறுமை மொய்த்த மன வெளி
கழிந்து போன நினைப்புகளை அணிந்துகொண்டு
வீதி வலமொன்றிற்கு தயாராகிறது
மிடுக்கோடு
கோடுகளுக்குள் சிக்குண்ட
நிகழ்காலம் நீள மறுப்பதும்
நீர்த்துப்போகப்போகும் வருங்காலமும் கூட
வராமலையே போகலாம்
எனக்கான எனது உரிமங்கள்
மறுக்கப்பட்ட பட்டியலொன்றில்
சேர்க்கப்பட்டு என் குரல்
அகாலமொன்றால் நெரிக்கப்படலாம்
அன்றென் கனவுகள் விழிபிதுங்கி
வெறித்தபடி பார்க்கும் இந்த உலகத்தை
ஆரம்ப புள்ளியிடப்பட்ட என் வியாபிப்புகள்
மறுக்கப்பட்டு அந்த அகாலத்தின் கரங்களில்
திணிக்கப்பட்ட போது
நாளை பற்றிய உருவேற்க காத்திருந்த
காலம் வழிமறிக்கப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டது
சிறைப்பட்ட சுவர்களுக்குள்
நான் எனும் நாளைய கனவுகள்
அணிந்துகொண்ட அகாலத்தின் அச்சம்
ஒன்றைத்தவிர முழுவதும்
துச்சாதன வெறியர்களால்
துகிலுரியப்பட
அகாலத்தின் ஆதியாக
நிர்வான உடை போர்த்திக்கொண்டது
எனக்கென அன்றெழுந்த அகாலத்தின் குரல்.
-பிரியங்கன் பாக்கியரெத்தினம்