40 லட்சம் வருஷங்களுக்கு முன் ஆப்பிரிக்கச் சமவெளிப் பகுதியில் காதல் பிறந்தது என்கிறார்கள். அப்போதுதான் மூளையில் இருந்து முதல் நியூரோ கெமிக்கல்கள் மனித ரத்தத்தில் பாய்ந்து காதலின் காரணத்தால் அசட்டுச் சிரிப்பும் கைகளில் வியர்வையும் ஏற்பட்டதாம். ஆணும் பெண்ணும் கண்ணும் கண்ணும் கலந்து பார்த்து நிற்க… ”ஏய்! என்னடாது புதுசா?” என்று பெற்றோர்களால் அதட்டப்பட்டனர்.
மனிதன் இரண்டு கால்களில் நிற்கத் துவங்க, காதலால் அவன் உடல் உறுப்புகளில் ஏற்பட்ட மாறுதல்கள் வெளிப்படையாக அனைவருக்கும் தெரியத் துவங்க, தோளின் அகலம், கண்கள் இவைஎல்லாம் ஒவ்வொருவருக்கு வேறுபடுவதை உணர்ந்தபோது காதல் பிறந்தது.
கன்னம் கன்னம் தொடும்போது, கையும் கையும் படும்போது ஒரு நறுமணம். ஒரு மெல்லிய மிக மெல்லிய ஸ்பரிசம் போதும் மூளையில் இருந்து ரத்தத்தில் இந்த ரசாயனப் பொருட்கள் பாய்கின்றன… விளைவு-கை ஈரம், மேல்மூச்சு, காதலும் பதற்றமும் ஒன்றுபோல் அறிந்தார். காரணம் – ஒரே கெமிக்கல்கள்!
எல்லாவற்றுக்கும் மேல் பரவசம்! உற்சாகம்! உலகமே அலம்பிவிட்டாற்போல் வியப்பு. காரணம், அம்ப்தோ மின்கள், இவற்றில் டோப்பாமின், நோரெபின்ஃப்ரைன் குறிப்பாக, ஃபினைல் எத்தில் அமின் போன்ற வஸ்துகள் தான் அத்தனை ‘கிக்’குக்கும் காரணம்.
கவிஞர் மீரா,
‘உனக்கும் எனக்கும் ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்
நீயும் நானும் ஒரே குலம்
திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்
உன் தந்தையும் என் தந்தையும்
உறவினர்கள் – மைத்துனன்மார்கள்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை
நெஞ்சம் தாங்கலந் தனவே…”
என்று தற்கால சமூகத்தை நையாண்டி செய்கிறார்.
– சுஜாதா 1993ல் விகடனில் எழுதியது.