அப்பு போய்விட்டார்…
அழகுராசா போயிட்டார்…
மகத்தான வாழ்வொன்றை வாழ்ந்துவிட்டு மகராசா போயிட்டார்…!
பெருவாழ்வு வாழ்ந்த கோமகனார்
பெருமையோடு போய்விட்டார்…!
தெருவோரப் பதாகையெல்லாம்
பெருமைகொள்ளப் பெயர்தாங்கப் பெருமகனார் போய்விட்டார்…!
இரு நூற்றாண்டுகளில்
தடம்பதித்து, இனிதான வாழ்வுதனை நிறைவுசெய்து, ஒரு நூறாண்டை வயதாக நெருங்கையிலே
இளவரசர் வாழ்வுகொண்ட இன்முகனார் இவ்வுலகு நீங்கிப் போயே போய்விட்டார்…
இது என்ன வேடிக்கை
பிலிப்பையா இன்னும் இளவரசரா?
ஆம் ஆச்சியார் மகாராணி ஆனாலும்
அவர் (HER) கணவர் இளவரசராகவே அனுதினமும் வாழ்ந்துவிட்டு அழைப்பு வரப்போய்விட்டார்…
அப்புவின் வாழ்வும் ஒருவகையில் தியாகம்தான், ஆம் இறுதிவரை ஒப்பேற்ற எழுதிவைத்த யாகம்தான்…
ஆச்சிக்கு இரண்டு அடி பின்னின்ற
அங்கீகாரக் கணவனாக
அத்தனையும் ஏற்றுக்கொண்டு,
அரசனாக இல்லாமலே அனுசரித்து வாழ்ந்த அப்பு அகாலமாய்ப் போய்விட்டார்…
பெண்ணை முன்னிறுத்தி,
பெருமைகொள்ள அழகுபார்த்த
மண்ணின் பழமைகாத்த
மகராசா போய்விட்டார்…
ராச்சியத்தின் அரசாட்சியை
அரசனாய் இல்லாமலே…
அழகு சேர்த்த பெருமகனார்
அமைதி கொள்ளப் போய்விட்டார்…
நினைத்திருந்தால் மகராசன் மன்மதராசனாய் வாழ்ந்திருக்கலாம்…
நினைத்திருந்தால் கோமகனார்
கோடுதாண்டிப் போயிருக்கலாம்…
நினைத்ததை நினைத்தபடி வாழ்ந்திருக்க வாய்ப்பிருந்தும் அனைத்தையும் அளவோடு அழுகுசேர்த்த அருமகனார்…
என் ஆச்சியின் வளவுக்குள் அப்புவின் நினைவாய், அந்நாளில் அவர் நட்ட அந்த மாமரம் நெஞ்சில் சடுதியாய் நிழலாட…
பிலிப்பையாவை வழயனுப்பும் பீரங்கி முழக்கங்கங்களால் நினைவு மீண்டு,
விக்கித்து நிற்கும் பக்கிங்காம் மாளிகைச் (Buckingham Palace) சுவற்றிற்கு ஆறுதல் சொல்ல விளைகிறது பெண்களைச் சமமாய்ப் போற்றும் தமிழீழ மனது!
-காந்தள்-