முதல் அழுகைச்
சத்தம் கேட்டதும்
ஆண்குறியை ஆடம்பர
அடையாளம் எனக்கருதும்
சில குரூர முகங்கள்
சுழித்துக்கொண்டன!
பெண் குறியோடு
பிறந்த பிசாசு போல
ஏளனமும் நையாண்டியும்
பிற்போக்குக் கரக்களும்
தூக்கிக் கொஞ்ச
சலித்துக்கொண்டன!
பதினாறு கடந்தும்
பருவமடையப் பிந்திற்று!
நச்சு நாக்குகளுக்குக்
கொண்டாட்டம்தான்!
நல்லவேளை,
வாடைக்காற்று வீசிற்று!
என் கல்விக் கனவை
ஊர்க்கிழவிகளின்
வெற்றிலை வாய்கள்
மென்று துப்பிவிட்டன!
என்னைத் தாங்குமளவிற்கு
என் வீட்டுக்கூரைக்கோ
அவ்வளவு தெம்பில்லை!
பாட்டியின் பழைய
சேலையின் உயிரும்
ஊசலாடுகிறது!
பாவி இவள் எதில் தொங்கி
செத்துத் தொலைக்க?
வாய்த்தது மஞ்சள் கயிறு!
கண்ணிமைப்
பொழுது போல
காலம் உருண்டோட
படுத்த படுக்கையில் நான்!
மாலை சாத்திய
புகைப்படத்தில் அவர்!
தாகத்துக்கு தண்ணீர்
கேட்கவும் குரல்
நடுங்குகிறது!
மருமகள் யாருக்கோ
சொல்கிறாள்,
‘எமனுக்கு தண்ணி
காட்டுது கிழவி’!!!
சி்.கிரிஷாந்த்ராஜ்