காற்றுக்காக காத்திருந்தோம் காரிருளில் வீற்றிருந்தோம்
ஊற்றெடுத்த வியர்வையிலே உட்கார்ந்து தானிருந்தோம்
நாற்றுவயல் நோக்கியே நடந்திடவே எண்ணியே
வீற்றிருந்தோம் வாசலில் விடியலை நோக்கியே
சேற்றுவயல் சென்றிடவே செங்கதிரோன் வரவையே
ஈற்றுநிலா மறைந்திடவே இன்பநிலா உறங்கிடவே
ஏற்றுவரும் எழிலொளியை எழில்விழியில் கண்டிடவே
ஆற்றுநீர் ஓடையில் ஆடிவரும் ஆதவனை
புதுக்கதிர் பரிதியாக்கி புதனெனும் தினத்திலே
மெதுவாக வந்திடவே மென்மையுடன் அழைத்திடுவோம்
பொதுவுடைமை அறிவனாகி பொதுவெளியில் வருகையிலே
புதுமைகள் படைத்திடும் பூந்தென்றல் காற்றினிலே
பதுமைகளின் ஓவியங்கள் பூக்கோலம் போட்டிடுதே
மதுவுண்ட வண்டாகி மாசிலா கதிர்ப்பூவில்
மெதுவாக வீற்றிடுதே மதுவுக்குள் மூழ்கிடுதே
எதுவென்று தெரியாமல் எரியாமல் வருகின்றதே
வதுவாகி வந்திருக்கும் வஞ்சிமகள் புவியன்னை
பொதுவுடமைக் கதிரவனை பொற்கரத்தால் கூப்பிடுதே
புதுவையின் பாரதியும் பைந்தமிழால் அழைத்திடவே
கதிரவன் வருகிறான் கிழக்கின் தோன்றலாகவே..
கோ.பூமணி