குழந்தைகளுக்கு ஏற்படும் ப்ரோஜீரியா என்ற இளம் வயதில் முதுமை அடையும் அரிதான நோய்க்கு தற்போது நவீன சிகிச்சை முறை கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
உலக அளவில் பிறக்கும் 20 மில்லியன் குழந்தைகளில் ஒருவருக்கு இளம் வயதிலேயே முதுமை அடையும் அரிதான நோயான ப்ரோஜீரியா எனப்படும் நோய் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்.
இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகபட்சம் 13 ஆண்டுகள் வரை உயிருடன் இருப்பார்கள். உலகத்தில் தற்போது ஆயிரத்திற்கும் குறைவானவர்களே இந்நோயால் பாதிக்கப்பட்டு, உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள்.
இத்தகைய பாதிப்பிற்குள்ளாகும் குழந்தைகளின் வளர்ச்சி சராசரிக்கும் குறைவான உயரத்துடனும், எடையுடனும் இருக்கும். இவர்களின் முகத்தோற்றம் வித்தியாசமானதாக இருக்கும்.
குறிப்பாக கண்கள் மற்றும் கண் இமைகள் முழுமையாக மூட இயலாத அளவிற்கும், தோல் சுருக்கமிகவும், மெலிதாகவும் இருக்கும். இவர்களின் குரல் கூட ஏனையவர்களை விட மாறுதலாக இருக்கும்.
இவர்களுக்கு இதுவரை நிவாரணம் பெறும் வகையிலான சிகிச்சைகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இவர்களை குணப்படுத்த டி என் ஏ எடிட்டிங் மெத்தட் ( DNA Editing Method ) எனப்படும் மரபணு தொகுப்பில் மாற்றம் செய்யப்படும் சிகிச்சை முறை கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.