கொரோனா நோய்த்தொற்று அதி தீவிரம் அடைந்துள்ள நிலையில் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள வீட்டிற்குள் இருக்கும் தருணத்திலும் முகக் கவசம் அணிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
உருமாற்றம் பெற்ற கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை வெகு வேகமாக தெற்காசிய நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்திருக்கிறது. கடந்த காலங்களில் கொரோனாத் தொற்று பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டால், அவருக்கு எங்கிருந்து தொற்று பரவியது என்பதைக் கண்டறிவது கடினமாக இருந்தது. மேலும் தொடர்புடைய நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் எவரெவர் என்பதை தேட வேண்டிய நிலையும் இருந்தது. ஆனால் தற்போது குடும்பம் குடும்பமாக கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படுகிறது.
ஒரு வீட்டில் குடும்பத் தலைவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தால் அதற்கு அடுத்த சில தினங்களில் குடும்பத் தலைவிக்கும் மற்றும் குடும்பத்திலுள்ள ஏனைய உறுப்பினர்களும் அறிகுறிகள் தோன்றுகின்றன. அவர்கள் அனைவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவதற்குள், அவர்களின் நுரையீரல் 25 சதவீத பாதிப்பிற்கு ஆளாகிறது. அதற்குப் பிறகு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறவேண்டிய கட்டாயச் சூழலும் எழுகிறது.
இதற்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே அறைக்குள் பல மணி நேரம் அருகருகே இருக்க வேண்டிய சூழல் முக்கிய காரணமாக அமைகிறது. அதே தருணத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் அனைவரும் குளிர்சாதன கருவிகளை இயக்கி, அறைகளை மூடி நீண்ட நேரம் அதற்குள் இருப்பதும் தொற்று பரவலுக்கு காரணமாகிறது.
இதனால் வெளியே சென்று வேலை செய்துவிட்டு திரும்பும் குடும்பத் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் தங்களின் வீடுகளில் உள்ள குழந்தைகளிடமிருந்து சற்று விலகி இருப்பதன் வாயிலாக நோய்த்தொற்றுகளைத் தடுக்கலாம். அதே தருணத்தில் அவர்கள் தனியே உறங்குவதும், உறங்கும் நேரம் தவிர ஏனைய நேரங்களில் வீட்டிற்கு உள்ளேயும் முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகி இருக்கிறது. சில காலத்திற்கு இத்தகைய கடினமான சூழலை பொறுமையுடன் எதிர்கொண்டால் கொரோனாவை வெல்ல இயலும். அத்துடன் எம்முடைய குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க இயலும்.
அதே தருணத்தில் நீங்கள் வீட்டில் இருக்கும் தருணத்தில் முகக் கவசத்தை அணிந்து கொண்டாலும் மூன்று மணித்தியாலத்திற்குள் முகக் கவசத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட முகக் கவசத்தை பயன்படுத்துவது தான் சிறந்தது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
டொக்டர் சுதா சேஷய்யன்