கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே நாகதோஷம் காரணமாக திருமணம் தள்ளிப் போனதால் விரக்தியடைந்த காவலர், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
கடலூர் மாவட்டம் புதுச்சந்திரம் அருகே உள்ள வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ராஜேஷ்குமார் (27). இவர் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள 10-வது பட்டாலியனில் காவலராகப் பணிபுரிந்து வந்தார்.
இவரின் பெற்றோர் கடந்த சில வருடங்களாக ராஜேஷ்குமாருக்குத் திருமணத்திற்குப் பெண் பார்த்து வந்தனர். பெண் பார்க்கச் சென்ற இடமெல்லாம் இவருக்கு நாகதோஷம் இருப்பதால் திருமணம் தடைப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், கடந்த சில நாள்களாகவே தனக்குத் திருமணம் நடக்கவில்லையே என ராஜேஷ்குமார் விரக்தியில் இருந்ததாகச் சொல்கிறார்கள். கடந்த 4 நாள்கள் முன்பு விடுமுறை எடுத்துக்கொண்டு காளகஸ்தி சென்ற ராஜேஷ்குமார், தோஷம் கழித்துப் பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டுவிட்டு மாடிக்கு தூங்கச் சென்றுள்ளார். நேற்று காலை நீண்டநேரமாகியும் அவர் மாடியிலிருந்து இறங்கி வராததால் குடும்பத்தினர் மாடிக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது ராஜேஷ்குமார் பூச்சி மருந்து குடித்து இறந்துகிடந்துள்ளார்.
இது குறித்து புதுச்சத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரின் தற்கொலைக்கு திருமணம் தள்ளி போனதுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்திவருகின்றனர்.
சிறப்புக் காவல்படை காவலர் திருமணம் ஆகவில்லையே என விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.