ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டமையினால் கட்சிக்குள் குழப்பமும் நிச்சயமற்ற தன்மையும் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நியமனத்தை வழங்கியிருந்த ஜனாதிபதி தற்போது கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவது என தீர்மானித்துள்ளதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கட்சியின் அமைப்பாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச நேற்று (செவ்வாய்க்கிழமை) நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நியமனம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை செல்லுபடியாகும் என அறியமுடிகின்றது.
குறிப்பாக தேர்தலில் நடுநிலை வகிக்கவும் சுதந்திர கட்சியின் நாடாளுமன்றக் குழு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதித்திருந்த நிலையில் அவர் இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவது என்ற ஜனாதிபதியின் முடிவு சுதந்திர கட்சியின் மத்தியக்குழுவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இந்த விடயம் நாடு முழுவதும் உள்ள சுமார் 160 கட்சி அமைப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.