எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், தமிழ் மக்கள் யாருக்கு வாக்களித்தாலும், அவர்களின் தீர்ப்பை தாழ்மையோடு ஏற்றுக்கொள்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்தோடு பிறக்கும் தமது புதிய ஆட்சியில், தமிழ் மக்கள் சகல உரிமைகளையும் அனுபவிக்க உரித்துடையவர்கள் என்பதை நாம் உறுதிப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில், தமிழ் மக்கள் தமது வாக்குகளை நிச்சயமாக பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சில தீய சக்திகள் பல்வேறு திரிபுபட்ட கருத்துக்களை கூறி, உங்களைக் குழப்பி, தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளமையை எம்மால் உணர முடிகிறது.
அவர்களின் அந்தத் திட்டத்தை முறியடிக்கும் வகையில் உங்கள் வாக்களிப்பு அமைய வேண்டும். தமிழர்களிடம் உள்ள பலம் வாக்கு பலமாகும். தமிழர்களாகிய நீங்கள் வாக்களித்து, உங்கள் பலத்தினை நிரூபித்து, அதன் ஊடாக உங்கள் தேவைகளையும் உரிமைகளையும் நிறைவேற்றக் கூடிய பாரதீனப்படுத்த முடியாத ஜனநாயக உரித்துடையவர்கள்.
நீங்கள் தேர்தல்களில் எவ்வளவு ஈடுபாடு உடையவர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. உங்கள் பகுதிக்கு வரும் போதும், நான் காணும் சிலரிடம் கதைக்கும் போதும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட, ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதில் நீங்கள் மிக உறுதியுடன் உள்ளமையை நான் அறிவேன்.அப்படிப்பட்ட உங்களை சிலர் பிழையாக வழிநடத்த முயற்சிக்கின்றமை எமக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது.
அது மட்டுமல்லாது, இலங்கையின் தேர்தல்களில் நீங்கள் ஈடுபாடற்றவர்கள் என்பதை சர்வதேச நாடுகளிற்கு காட்டி, உங்கள் மட்டில் வெளிநாடுகள் வைத்துள்ள நன் மதிப்பை குறைக்க வேண்டும் என்பதிலும் சிலர் ஈடுபாடு உள்ளனர். அவர்களை இனம் கண்டு உறுதியுடன் நீங்கள் வாக்களிப்பது காலத்தின் கட்டாயம்.
இன்று நீங்கள் இவ்வளவு சுதந்திரத்துடன் நடமாடுவதற்கு காரணம் யார் என்பது உங்களுக்கு தெரியும். 2009 ஆம் ஆண்டு இன்றைய எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச எடுத்த திடமான முடிவின் பலனாகவே இன்று முழு இலங்கையும் அமைதிக் காற்றை சுவாசிக்கின்றது.
அதேவேளை, தமிழ் மக்களாகிய உங்களுக்கு இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க வேண்டிய தார்மீக உரிமை உண்டு.
நீங்கள் யாருக்கு வாக்களித்தாலும், உங்கள் தீர்ப்பை தாழ்மையோடு ஏற்றுக்கொண்டு, பிறக்கும் எமது புதிய ஆட்சியில் உங்களிற்கான சகல உரிமைகளையும் அனுபவிக்க உரித்துடையவர்கள் நீங்கள் என்பதை நாம் உறுதிப்படுத்துவோம்” என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.