கிளிநொச்சியில் கள்ள சாராயத்தை ஒழிக்க வலியுறுத்தி பெண் ஒருவர் தன் ஒன்பது மாதக் குழந்தையுடன் தனிநபராக வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் உள்ள காந்தி கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பை ஒழிக்க வலிறுத்தும் குறித்த பெண், இது தொடர்பில் கவனம் செலுத்தாவிடில் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக எச்சரித்துள்ளார்.
தன்னைப் போன்ற பெண்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கான பாதுகாப்பான சூழல் காணப்படவில்லை, கசிப்பு பாவனையாளர்களால் அச்சமான நிலைமையே ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் நிம்மதியில்லை, பாடசாலை பிள்ளைகள் நிம்மதியாக படிக்க முடியாதுள்ளது. குறிப்பாக பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது.
இது தொடர்பில் கிராம அலுவலர், மற்றும் பொலிசாரிடம் முறையிட்டும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார். இவை தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தாமையின் காரணமாக தான் இப்போராட்டத்தில் ஈடுபடுதாக தெரிவிக்கிறார்.