கிரிக்கெட் இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ரி-20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 தொடர் நாளை (சனிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.
கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சத்தால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல். ரி-20 தொடரின் 13ஆவது அத்தியாயம், இம்முறை நாளை முதல் நவம்பர் 10ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகின்றது.
அண்மையில் இத்தொடருக்கான போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டது. இதன்படி, டுபாயில் 24 போட்டிகளும், அபுதாபியில் 20 போட்டிகளும், ஷார்ஜாவில் 12 போட்டிகளும் நடைபெறுகின்றன.
அபுதாபியில் நடைபெறவுள்ள முதல் லீக் போட்டியில், நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இரண்டாவது போட்டியில் டெல்லி கெபிட்டல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
மூன்றாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
10 நாட்களில் இரண்டு போட்டிகளில் நடைபெறுகின்றன. முதல் போட்டி 3.30 மணிக்கும், இரண்டாவது போட்டி 7.30 மணிக்கும் நடபெறுகிறது.
பிளே ஒஃப் சுற்றுகள் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி நவம்பர் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மொத்தம் 53 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி தொடர், இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களிலேயே மிக நீண்ட தொடராகும்.