கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான கனடாவின் பியன்கா ஆண்ட்ரெஸ்கு விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடரில் பங்கேற்ற ஆண்ட்ரெஸ்கு, அதன்பிறகு முழங்கால் காயம் காரணமாக அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து விலகினார்.
தனது விலகல் குறித்து பியன்கா ஆண்ட்ரெஸ்கு கூறுகையில், ‘பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில் பங்கேற்பதில்லை என்ற கடினமான முடிவை எடுத்துள்ளேன். எனது உடல் நலத்தில் கவனம் செலுத்துவதற்காக இந்த சீசன் முழுவதும் எந்தப் போட்டியிலும் விளையாடுவதில்லை என முடிவெடுத்துள்ளேன்’ என கூறியுள்ளார்.
இதேவேளை பிரான்ஸ் வீரர் பெனாய்ட் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இரு முறை உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரும் இந்த தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஜப்பானின் முன்னணி வீராங்கனை நவோமி ஒசாகா விலகியிருந்தார்.
முன்னதாக கடந்த மே 24ஆம் திகதி முதல் ஜூன் 7ஆம் திகதி வரை நடைபெறுவதாக இருந்த பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்தத் தொடர் செப்டம்பர் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.