சசிகலாவை எதிர்த்துதான் நாம் ஆட்சியை நடத்திச் செல்கின்றோம் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இன்று (சனிக்கிழமை) வேலூர் மாவட்டத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக கே.சி.வீரமணி மேலும் கூறியுள்ளதாவது, “தமிழகத்தில் நடமாடும் நியாயவிலைக் கடைகளை முதல்வர் பழனிசாமி கடந்த 21ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார்.
இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டில் பெரும்பாலான கிராம மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. குக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் இந்தத் திட்டத்தால் பெரிய பலன் பெறுவார்கள். அவர்கள் எளிதில் ரேஷன் பொருட்கள் பெற முடியும்.
அ.தி.மு.க.வில் சசிகலா இணைப்பு குறித்து பத்திரிகைகள்தான் குழப்பத்தை உருவாக்குகின்றன. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அவர்கள் தேவை இல்லாதவர்கள். மக்களால் வெறுக்கப்படக் கூடியவர்கள் என்ற நிலையில்தான் இன்றைக்கு இந்த ஆட்சியும் கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.