அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோருடன் பொம்பியோ அதிகாரபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
அதற்கமைய அவர் நாளை ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு மிக நீண்ட கால நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இரு நாடுகள் சார்ந்த பல முக்கிய விடயங்கள் குறித்து நேருக்கு நேர் பேசப்படுமென கொழும்பு இராஜதந்திரிகள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக பாதுகாப்புச் சார்ந்த இரு தரப்பு ஒத்துழைப்புகளில் இலங்கையின் பூரணமான பங்களிப்புகள் மற்றும் பங்குடமை என்பன ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது அமெரிக்க குழுவினர் கலந்துரையாடவுள்ளனர்.
அதேபோன்று மிலேனியம் சவால் ஒப்பந்தம் மற்றும் சோபா ஆகிய ஒப்பந்தங்களின் அடுத்த கட்டம் குறித்து இதன்போது ஜனாதிபதியுடன் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த விஜயத்தின் போதான கலந்துரையாடல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக ஈடுபாட்டின் பல பகுதிகள் உள்ளடக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக இந்தோ – பசுபிக் பிராந்தியத்திற்கான பொது இலக்குகள் குறித்து முக்கிய அவதானம் செலுத்தும் வகையில் தெற்காசிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் பொம்பியோ மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் மார்க்டி. எஸ்பர் ஆகியோரின் கொழும்பு சந்திப்புகள் முக்கியத்துவமிக்கதாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யும் மிக உயர்ந்த அமெரிக்கப் பிரமுகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.