நான் போக வேண்டியிருக்கிறது~
என் முப்பாட்டன் நட்ட சூலங்கள்
புத்தனாக மாறு முன்பே,
எங்கள் கோயில்,
மசூதிக் கோபுரங்கள் விகாரங்கள் ஆகுமுன்பே,
என் தாய் தனித்து நடந்த வீதிகளில்
அவள் ஓலம் கேட்பதற்கு முன்னதாக,
நான் நடைபழகிய தரவைகளில்
என் கால்கள் தறிக்கப்படு முன்,
என் பாடல்கள்
குரல்வளைக்குள் நசுக்கப்படுமுன்,
என்னதல்லாத மொழியில்
தேசிய கீதம் காற்றேறும் தேசத்திலிருந்து,
என் சகோதரர்கள் மரித்தநாளை
கொண்டாடும் மக்கள் வாழும் நிலத்திலிருந்து,
இதோ எழுதிக் கொண்டிருக்கும்
என் விரல்கள் வெட்டுண்டு வீழும் முன்,
நான் போக வேண்டியிருக்கிறது…
என் பிரிய தேசமே!
என்னுடன் எழுந்து வாயேன்…
கமல்.ப