அ.தி.மு.க கூட்டணிக்கு பத்துக்கும் மேற்பட்ட சிறிய கட்சிகள் ஆதரவை வழங்கி அக்கட்சியின் இரட்டை தலைமையிடம் கடிதங்கள் வழங்கியிருக்கிறார்கள்.
அ.தி.மு.க கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகளும், பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இக்கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் தே.மு.தி.க வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை இன்றும் தொடருகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணிக்கு சிறிய கட்சிகள் பலவும் தங்களது ஆதரவை அள்ளி வழங்கியிருக்கின்றன. அந்த வகையில் அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நடிகர் கார்த்திக் தலைமையிலான மனித உரிமை காக்கும் கட்சி, ஏ சி சண்முகம் தலைமையிலான புதிய நீதி கட்சி, என் ஆர் தனபாலன் தலைமையிலான பெருந்தலைவர் மக்கள் கட்சி, டொக்டர் என் சேதுராமன் தலைமையிலான அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், டொக்டர் என் ஜோதி முத்துராமலிங்க தேவர் தலைமையிலான பசும்பொன் தேசிய கழகம், முருகன் ஜி தலைமையிலான பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி, வேட்டவலம் கே மணிகண்டன் தலைமையிலான இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, எஸ் ஷேக் தாவூத் தலைமையிலான தமிழ் மாநில முஸ்லிம் லீக், சி. அம்பேத்கர் பிரியன் தலைமையிலான இந்திய தேசிய குடியரசு கட்சி, இடிமுரசு இஸ்மாயில் தலைமையிலான முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம், டொக்டர் எம் எஃப் தமீம் தலைமையிலான தமிழக ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி, எஸ். எஸ். ஆர் சரவணவேல் தலைமையிலான செங்குந்தர் அரசியல் அதிகாரம், அர்ஜுன் சம்பத் தலைமையிலான இந்து மக்கள் கட்சி தமிழகம் ஆகிய 13 கட்சிகள் அதிமுகவின் தலைவர்களான ஒ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி கே பழனிச்சாமி ஆகியோர்களை சந்தித்து தங்கள் கட்சியின் ஆதரவு கடிதத்தை வழங்கினார்கள்.
இவர்களைத் தவிர கிறிஸ்தவ அமைப்பை சார்ந்த சில அரசியல் கட்சிகளும் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்.