இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் பிரிவில் சஷிகலா சிறிவர்தனவின் சகலதுறை ஆட்டம், இனோக்கா ரணவீரவின் சிறந்த பந்துவீச்சு உதவியினால் ஹசினி பெரேரா தலைமையிலான இலங்கை கடற்படை மகளிர் அணி 2 விக்கெட்டுக்களால் இறுக்கமான வெற்றியை பெற்று சம்பியனானது.
8 அணிகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரானது லீக் முறையில் நடைபெற்றது. இதன்படி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பெறும் அணி சம்பியனாகவும், இரண்டாவது இடம்பெறும் அணி உப சம்பியனாகவும் தெரிவு செய்யப்பட்டன. இதன்படி இப்போட்டித் தொடரின் அனைத்துப் போட்டிகளில் (7) வெற்றியை பதிவு செய்த இலங்கை கடற்டை மகளிர் அணி 14 புள்ளிகளைப் பெற்று சம்பியனானதுடன், இலங்கை இராணுவ மகளிர் அணி 12 புள்ளிகளுடன் உபசம்பியனானது.
வெலிசரையிலுள்ள இலங்கை இராணுவ கடற்படை முகாம் மைதானத்தில் நேற்று (02) நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இராணுவ மகளிர் ஏ அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் மதுஷிகா (37), சுகந்திகா குமாரி (30), நிலூக்கா குஷாந்தி (27) மூவர் மாத்திரமே குறிப்பிடத்தக்களவு ஓட்டங்களை பெற்றனர்.
பந்துவீச்சில் இனோக்கா ரனவீர 4 விக்கெட்டுக்களையும், , சஷிகலா சிறிவர்தன, சத்யா சந்தீப்பனி இருவரும் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை கடற்படை மகளிர் அணி 48.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து இறுக்கமான வெற்றியை பதிவு செய்து, இப்போட்டித் தொடரில் தோல்வியைத் சந்திக்காத அணியாக சம்பியனானது. துடுப்பாட்டத்தில் பந்துவீச்சில் கைகொடுத்த அனுபவ வீராங்கனையான சஷிகலா சிறிவர்தன துடுப்பாட்டத்திலும் 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத் அணியின் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றினார். இவரைத் தவிர ஹர்ஷனி விஜேரத்ன 21 ஓட்டங்களையும், உதேஷிக்கா பிரபோதினி ஆட்டமிழக்கமால் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் நிலக்சி சில்வா 3 விக்கெட்டுக்களையும், கனேஷா குமாரி, சுகந்திகா குமாரி இருவரும் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். இப்போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த சஷிகலா சிறிவர்தன ஆட்டநாயகியாக தெரிவானார்.