தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை வீட்டு பணிப்பெண் என சுமார் 8 ஆண்டுகள் அடிமையாக வைத்திருந்ததாக ஆஸ்திரேலிய தம்பதியினரின் மீது ஆஸ்திரேலியாவின் விக்டோரிய உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த 2 மாதங்களாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், தற்போது அத்தம்பதியினர் குற்றவாளிகள் என தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தம்பதியினரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணின் விசா முடிவடைந்த நிலையில் அவர் இந்த வழக்கினை போலியாக தொடுத்துள்ளதாக வைத்த வாதத்தை நீதிபதிகள் குழு நிராகரித்திருக்கிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டுவரை சுமார் 8 ஆண்டுக்காலம் குறிப்பிட்ட பணிப்பெண்ணை வீட்டைவிட்டு வெளியில் செல்ல அனுமதிக்காமல் அடிமையாக வைத்திருந்து, பல்வேறு கொடுமைகளை செய்ததாக அப்பெண்ணின் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஒரு நாளுக்கு அவருக்கு 3 ஆஸ்திரேலிய டாலர்கள் (170 இந்திய ரூபாய்) என்ற வீதமே சம்பளம் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஆஸ்திரேலிய தம்பதியினர், அப்பணிப்பெண்ணை தங்களது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருவராகவே நடத்தியாகதாக தெரிவித்தனர்.
முன்பு நடந்த விசாரணையின் போது அத்தம்பதியரின் வழக்கறிஞர், வீட்டினர் அனைவரும் அப்பெண்ணை ‘அம்மாச்சி’ என்று அன்பாகவே அழைத்துவந்ததாகவும் வீட்டு வேலைகளில் உதவிபுரிந்து வந்த அவர் ஒருபோதும் அடிமையாக நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் பாதிக்கப்பட்ட தமிழகப் பெண், “அவர்கள் தன்னை இறுகிப்போன கோழிக்கறியால் எனது தலையில் அடிப்பார்கள். தூங்கும் போது சுடுத்தண்ணீர் எடுத்து ஊற்றினார்கள்,” என விசாரணையில் கூறியிருந்தார்.
இந்த சூழலில், இத்தம்பதியனர் இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்பளித்த போது, குற்றஞ்சாட்டப்பட்ட பெண் தனது கணவரின் தோளில் தலையை அடித்து அழுததாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அத்துடன் நீதிமன்ற உத்தரவின் காரணமாக அத்தம்பதியினர் பெயர் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தற்போது நீதிமன்றம் அவர்களை குற்றவாளிகளாக தீர்பளித்ததை அடுத்து அத்தம்பதியினர் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. குமுதினி கண்ணன், கந்தசாமி கண்ணன் என அறியப்படும் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பகுதியைச் சேர்ந்த அத்தம்பதியினருக்கு தண்டனை தொடர்பான விசாரணை வரும் ஜுன் மாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவர்கள் பிணையில் வீட்டில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் வீட்டுக்கான பொருட்களை வாங்கவும்- மருத்துவ தேவைகளுக்காக வெளியில் செல்லவும் மட்டுமே அவர்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் இந்த காலத்திலேயே ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களது 3 குழந்தைகளுக்கான ஏற்பாட்டினை செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஆஸ்திரேலியாவில் அடிமையாக நடத்தியதில் இவர்கள் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதால் இவர்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலான காலத்திற்கு சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. —