பிரபல டென்னிஸ் வீரரான ஜப்பானின் கெய் நிஷிகோரி, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இன்று காலை ஃபுளோரிடாவில் இருந்தபோது கொவிட்-19 பரிசோதனை மேற்கொண்டேன். அதில் எனக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் சின்சினாடி தொடரிலிருந்து விலகியுள்ளேன்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நானும் எனது குழுவினரும் மீண்டும் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வோம். அதன்பிறகு புதிய தகவலை அளிக்கிறேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் கலந்துகொள்ளவுள்ள நிஷிகோரி, கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். அதன்பிறகே அவரால் இத்தொடரில் பங்கேற்க முடியும்.
கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே, உலகின் முதல் நிலை வீராங்கனை அவுஸ்ரேலியாவின் ஆஷ்லி பார்டி, நடப்பு சம்பியன் கனடாவின் பியான்கா ஆண்ரெஸ்கு ஆகியோர் விலகியுள்ளனர். அதேபோல ஜாம்பவான் ரபேல் நடாலும் விலகியுள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான அமெரிக்க பகிரங்க டென்னிஸ், எதிர்வரும் 31ஆம் திகதி செப்டம்பர் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இத்தொடரைக் காண இரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.