பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து குயிக் சேட்டின் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினின் பிரபல கால்பந்து அணியான பார்சிலோனாவின் தலைமை பயிற்சியாளராக ஸ்பெயின் முன்னாள் வீரர் குயிக் சேட்டின் கடந்த 7 மாதங்களாக பணியாற்றி வந்தார்.
சில தினங்களுக்கு முன்பு நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் கால்இறுதி சுற்றில் பார்சிலோனா அணி 2-8 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியிடம் வீழ்ந்தது.
கடந்த 74 ஆண்டுகளில் பார்சிலோனா அணியின் மோசமான தோல்வியாக இது அமைந்தது. இதையடுத்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து குயிக் சேட்டின் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
புதிய பயிற்சியாளராக நெதர்லாந்து அணியின் முன்னாள் வீரர் 57 வயதான ரொனால்டு கோமேன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது நெதர்லாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரொனால்டு கோமேன் அந்த பொறுப்பில் இருந்து விலகுகிறார். பார்சிலோனா பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதற்கு முன் ரொனால்டு கோமேன் சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.
2020-21-ம் ஆண்டு கால்பந்து சீசனுக்கு குறிப்பிட்ட சில புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டும், மூத்த வீரர் லூயிஸ் சுவாரசை கழற்றி விட வேண்டும் என்று அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.