அவுஸ்ரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 1-1 என்ற கணக்கில் சமநிலைப்பெற்றுள்ளது.
மன்செஸ்டர்-ஓல்ட் ட்ரப்போர்ட் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஒய்ன் மோர்கன் 42 ஓட்டங்களையும், ஜோ ரூட் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில், ஆடம் செம்பா 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டாக் 2 விக்கெட்டுகளையும், ஹசில்வுட், கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 232 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, 48.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ஓட்டங்களைளுக்கு சுருண்டது. இதனால் இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஆரோன் பின்ஞ் 73 ஓட்டங்களையும், மார்னஸ் லபுஸ்சேகன் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ், ஜொப்ரா ஆர்செர் மற்றும் சேம் கர்ரன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் அடில் ராஷித் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக முக்கிய 3 விக்கெட்டுகளை சாய்த்த ஜொப்ரா ஆர்செர் தெரிவுசெய்யப்பட்டார்.