ஐ.பி.எல். ரி-20 தொடரின் 31ஆவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
டுபாயில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள இப்போட்டியில், பெங்களூர் அணிக்கு விராட் கோஹ்லியும், பஞ்சாப் அணிக்கு கே.எல். ராகுலும் தலைமை தாங்கவுள்ளனர்.
இரு அணிகளும் இதுவரை 25போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 13முறை பஞ்சாப் அணியும், 12முறை பெங்களூர் அணியும் வெற்றிபெற்றுள்ளன.
நடப்பு ஆண்டு புள்ளிபட்டியலை பொறுத்தவரை பெங்களூர் அணி, ஏழு போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி, இரண்டில் தோல்வி என 10 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதேவேளை பஞ்சாப் அணி ஏழு போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி, ஆறில் தோல்வி என 2 புள்ளிகளுடன் இறுதி இடத்தில் உள்ளது.
இரு அணிகளும் முன்னதாக மோதிய போட்டியில், பஞ்சாப் அணி 97 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.
இந்தநிலையில் இந்த போட்டியின் ஊடாக பஞ்சாப் அணிக்கு பெங்களூர் அணி பதிலடி கொடுக்குமா அல்லது பஞ்சாப் அணி மீண்டும் வெற்றிபெறுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.