தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 2 இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ள நிலையில் கடைசி ஓவரை ஜடேஜா வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல்-இன் நேற்றைய ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் ஷிகர் தவானின் சதத்தால் தில்லி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் 19-வது ஓவரில் சாம் கரண் 4 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்த கடைசி ஓவரில் தில்லி வெற்றிக்கு 17 ஓட்டங்கள் தேவைப்பட்டன. பிராவோவுக்கு 1 ஓவர் மிதமிருந்த நிலையில், கடைசி ஓவரை ரவீந்திர ஜடஜா வீசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 2 இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்ததால், இந்த முடிவு விமரிசனத்துக்குள்ளானதாக அமைந்தது. அக்சர் படேல் 3 சிக்ஸர்கள் அடிக்க தில்லி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி ஓவரை பிராவோ வீசாமல் ஜடேஜா வீசியது ஏன் என்ற கேள்வியை ஆட்டம் முடிந்தவுடன் தோனியிடம் எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் தோனி தெரிவித்ததாவது:
“பிராவோ முழு உடற்தகுதியுடன் இல்லை. களத்தைவிட்டு சென்ற அவரால் திரும்ப வர முடியவில்லை. இதன் காரணமாகத்தான் கடைசி ஓவரை ஜடேஜா வீச வேண்டிய நிலை ஏற்பட்டது. கடைசி ஓவரை வீசுவது கரண் சர்மாவா, ஜடேஜாவா என்பதுதான் வாய்ப்பாக இருந்தது. ஜடேஜா வீசினார்.”