Lanka Premier League (LPL) போட்டிகள் அடுத்த வாரம் ஆரம்பமாக இருக்கும் வேளையில், Jaffna Stallions அணியினர் தமது புதிய இலச்சினையை (logo) வெளியிட்டுள்ளார்கள்.
Jaffna Stallions அணியின் இணை உரிமையாளரும், பிரசித்தி பெற்ற தொழில்நுட்பம்சார் தொழில் முனைவருமான Rahul Sood அவர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய இலச்சினை (logo), Jaffna Stallions அணியை சர்வதேச ரீதியில் பிரபலப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“சர்வதேச இலச்சினைகள் மற்றும் விளையாட்டுத்துறை தொடர்பில், ராகுலின் புதிய சிந்தனைகளும் தொலைநோக்குப் பார்வைகளும் விலைமதிப்பற்றவை” என்றார் Jaffna Stallions அணியின் பிரதம மூலோபாய அதிகாரியான (Chief Strategy Officer) ஆனந்தன் ஆர்னல்ட்.
“எங்களது இலக்கு உலகளாவியது, கண்டங்கள் கடந்த ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், நிர்வாகிகளைக் கொண்டிருந்தாலும், நாங்கள் இலங்கையர்களாக யாழ்ப்பாண நகரை பிரதிநிதிப்படுத்த கிடைத்த இந்த வாய்ப்பைப் பெருமையாகவே கருதுகிறோம்” என்று ஆனந்தன் ஆர்னலட் மேலும் தெரிவித்தார்.
கனேடிய செய்திச் சேவையான Canadian Pressற்கு அளித்த நேர்காணலில், Jaffna Stallions அணியின் இணை உரிமையாளராக இணைவதையிட்டு தான் பெருமகிழ்ச்சியடைவதாக Rahul Sood தெரிவித்தார்.
“உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணிக்கை நம்பமுடியாத அளவிற்கு அதிகமாக இருக்கிறது” என்று தெரிவித்த Rahul Sood, “இலங்கையில் LPL போட்டிகள் ஆரம்பமாவதைப் பற்றி அறிந்ததும் நான் அதை ஓரு கிடைப்பதற்கரியதொரு சந்தர்ப்பமாகவே நோக்கினேன்” என்றார்.
வியாஸ்காந்தை விளையாடச் சாத்தியமான அணிக்கு (probable squad) தெரிவு செய்யும் தைரியமான முடிவை எடுத்த Jaffna Stallions அணியின் தலைவரான திஸர பெரேரா, தனக்கு இளம் கிரிக்கெட் வீரர்களின் திறமையில் அபார நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார்.
“இலங்கை கிரிக்கெட் அணிக்கு திறமையான வீரர்களைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் நோக்கத்துடன், பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த, திறமையான கிரிக்கெட் வீரர்களிற்கு Jaffna Stallions அணி தொடர்ந்தும் விளையாடும் வாய்ப்புக்களை வழங்கும்” என்றும் திஸர பெரேரா தெரிவித்தார்.