இலங்கையில் முதல்முறையாக நடைபெறவுள்ள லங்கன் பிரீமியர் லீக் (எல்.பி.எல்) ரி-20 தொடரில், கண்டி டஸ்கர்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவதற்கு பிரெண்டன் டெய்லர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அணியில் விளையாடுவதாக இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல், இத்தொடரிலிருந்து விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக சிம்பாப்வேயின் பிரெண்டன் டெய்லர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நவம்பர் 25ஆம் திகதி டெய்லர் இலங்கைக்கு வருவார் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட காலம் காரணமாக அவர் முதல் சில போட்டிகளைத் தவறவிடுவார் என்றும் கண்டி டஸ்கர்ஸ் கிரிக்கெட் இயக்குநரும் அணி மேலாளருமான ஃபர்வீஸ் மஹாரூஃப் தெரிவித்துள்ளார்.
அணியின் ஆறாவது வெளிநாட்டு வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 34 வயதான பிரெண்டன் டெய்லர், இதுவரை இறுதியாக பாகிஸ்தான் அணிக்கெதிரான நடைபெற்ற ஒருநாள் தொடரில் சதம் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
162 ரி-20 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான பிரெண்டன் டெய்லர், 3,537 ஓட்டங்களை குவித்துள்ளார். அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கை ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களாகும். சராசரி 26ஆகும்.
இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள லங்கன் பிரீமியர் லீக் (எல்.பி.எல்) ரி-20 தொடர், எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதி முதல் டிசம்பர் 13ஆம் திகதி வரை தொடரை நடைபெறவுள்ளது. இத்தொடரின் போட்டிகள் அனைத்தும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.