இலங்கையில் தொடங்கப்பட்டுள்ள எல்பிஎல் கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப் போட்டி தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட சிறப்பு பதிவு வாசகர்களுக்காக…
காலி கிளாடியேட்டர்ஸ் அணியை 34 ஓட்டங்களினால் தோற்கடித்து கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
எல்.பி.எல். தொடரின் நான்காவது போட்டி நேற்றிரவு அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணிக்கும், ஷாஹித் அப்ரிடி தலைமையிலான காலி கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையில் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமானது.
தொடர் மழைக் காரணமாக போட்டியானது 5 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இடம்பெற்றிருந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணியானது ரஸ்ஸலின் அபார ஆட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 96 ஓட்டங்களை குவித்தது.
கொழும்பு அணி சார்பில் திக்ஷிலா டி சில்வா டக்கவுட்டன் ஆட்டமிழக்க, ரஸ்ஸல்ஸ் 19 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்களையும், லஹிரு இவன்ஸ் 10 பந்துகளுக்கு 21 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றனர்.
பந்து வீச்சில் காலி அணி சார்பில் மொஹமட் அமீர் 2 ஓவர்களுக்கு பந்து வீசி 46 ஓட்டங்களையும், அஷித பெர்னாண்டோ ஒரு ஓவர் பந்து வீசி 26 ஓட்டங்களையும் அதிகபடியாக வாரி வழங்கியிருந்தனர்.
97 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காலி அணி 5 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 62 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 34 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.
தனுஷ்க குணதிலக்க மாத்திரம் அதிபடியாக 30 ஓட்டங்களை பெற்றார்.
அதேநேரம் எல்.பி.எல். தொடரின் மூன்றாவது போட்டி தசூன் சானக்க தலைமையிலான தம்புள்ளை வைக்கிங், குசல் ஜனித் பெரேரா தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் அணிகளுக்கிடையே இடம்பெற்றது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களை குவித்தது.
அணி சார்பில் தசூன் சானக்க 34 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களையும், சமித் படேல் 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
196 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கண்டி அணியானது 9.4 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழைக் குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.
தொடர்ந்து மழை இடைவிடாது பெய்த காரணத்தினால் டக்வெர்த் லூயிஸ் முறைப்படி தம்புள்ளை அணி 4 ஓட்டங்களினால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கண்டி அணி சார்பில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 30 ஓட்டங்களையும், குசல் மெண்டீஸ் 34 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
எல்.பி.எல். தொடலில் இன்றைய தினம் எவ்வித போட்டிகளும் இடம்பெறாத நிலையில் நாளை தம்புள்ளை அணி யாழ்ப்பாணம் அணியுடனும், காலி அணி, கண்டி அணியுடனும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.