புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி எல்பிஎல் போட்டியில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Jaffna Stallionsயின் ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு அறிக்கை பின்வருமாறு,
“புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி எல்பிஎல் போட்டியில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாடு, பருவகால மழையிலும் பிற காலநிலை காரணிகளிலும் அதிகமாக தங்கியிருக்கும் ஒரு பிரதேசமாகும். அதே வேளை, இலங்கைத் தீவும் நீல நிறச் சமுத்திரங்களால் சூழப்பட்ட பிரதேசமாகும்.
இலங்கைத் தீவின் மக்களிற்கும் காலநிலை மாற்றங்களிற்கும் இடையில் ஒரு பலமான பந்தம் நிலவுகிறது. இந்தப் பந்தத்தின் வெளிப்பாடே இன்றைய போட்டியில் Jaffna Stallions அணியினர் அணிந்த ஒக்ஸிஜன் நீல நிற ஆடைகளாகும்.
கடந்த இரு நாட்களாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் புயல் காற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டும் Jaffna Stallions அணியினர் இந்த ஒக்ஸிஜன் நீல நிற ஆடைகளை அணிந்து விளையாடுகிறார்கள்.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமையை முன்னிட்டு தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ள Jaffna Stallions, இயற்கையின் சீற்றம் ஓய்ந்து விரைவில் வழமை நிலை திரும்பும் என்று நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்…“ என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.