லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 10ஆவது லீக் போட்டியில், தம்புள்ளை வைக்கிங்ஸ் அணி, 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.
ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், தம்புள்ளை வைக்கிங்ஸ் அணியும் கண்டி டஸ்கர்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி டஸ்கர்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய கண்டி டஸ்கர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குசல் மெண்டிஸ் 55 ஓட்டங்களையும் குசல் பெரேரா 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தம்புள்ளை அணியின் பந்துவீச்சில், கசுன் ராஜித மற்றும் மலிந்த புஸ்பகுமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ரமேஷ் மெண்டிஸ் மற்றும் சமித் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 157 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தம்புள்ளை வைக்கிங்ஸ் அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், தம்புள்ளை வைக்கிங்ஸ் அணி, 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.
இதன்போது, அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக அஞ்சலோ பெரேரா 67 ஓட்டங்களையும் தசுன் சானக 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கண்டி அணியின் பந்துவீச்சில், முனாப் பட்டேல், தில்ருவான் பெரேரா, அசேல குணரத்ன, சீக்குகே பிரசன்ன மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 49 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 3 பவுண்ரிகள் அடங்களாக 67 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அஞ்சலோ பெரேரா தெரிவுசெய்யப்பட்டார்.