இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்படும் நாட்டின் முதலாவது தொழில்முறை காற்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி முதல் கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாக உள்ளன. இந்த முயற்சியின் காரணகர்த்தாவாக இருக்கும் இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜஸ்வர் உமர் அவர்களை வீரகேசரிக்காக பிரத்தியேகமாக வினவியபோது கீழ்வரும் மிக முக்கியமான தகவல்களை எமக்கு அறிவித்திருந்தார்.
கடந்த 82 வருடங்களாக இலங்கை கால்பந்தாட்டத்தில் தொழில்சார் காற்பந்தாட்ட கட்டமைப்போ சுற்றுப்போட்டியொன்றோ இல்லாமை மிகவும் வருந்தத்தக்க விடயமாகும். இந்தக் குறையை அறிந்து இதனை நிவர்த்தி செய்வதற்காக கடந்த மூன்று வருட காலமாக பல இன்னல்களுக்கும் சர்ச்சைகளுக்கு மத்தியில் சூப்பர் லீக் எனப்படும் போட்டியினை நடாத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வந்தேன்.
மூன்று வருடங்களின் பின் இன்று இந்த கனவு நானவாகும் தருணத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் இலங்கையின் ரசிகர்களுக்கு அறியத்தருகிறேன். சூப்பர் லீக் சுற்றுப் போட்டியில் பல நிர்பந்தங்களுக்கு உட்பட்டு 10 கழகங்கள் இந்த சுற்றுப் போட்டியில் பங்கு கொள்ள தகுதி பெற்றுள்ளனர் இன்றைய கட்டத்தில் இந்த கழகங்கள் சுயாதீனமாக இயங்கக் கூடிய ஒரு புதிய நிறுவனமாக பதியப்பட்டு அதனூடாக தமது பொருளாதார மற்றும் மனிதவள முகாமைத்துவத்தை செய்யக்கூடிய வகையில் மாற்றப்பட்டுள்ளன.
இனிவரும் மூன்று வருட காலத்துக்குள் இந்த கழகங்கள், இலாபமீட்டும் காற்பந்து நிறுவனமாக மாறுவதோடு மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலான அங்கீகாரத்துக்கு வரும் நிலமைக்கும் உள்ளாக்கப்படும். இந்த கழகங்கள் ஏற்கனவே மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களை பதிவு செய்துள்ளதோடு மட்டுமன்றி சர்வதேச விளையாட்டு வீரர்கள் 4 பேரையும் ஒவ்வொரு அணியும் பதிவு செய்துள்ளன.
இதன் மூலம் காற்பந்தாட்டத்தில் மிகச்சிறந்த உத்திகளையம் சுவாரஷ்யமான போட்டிகளையும் எமது ரசிகர்கள் கண்டுகளிக்க முடியும். இதில் முக்கியமாக குறிப்பிடத்தக்கது. இந்த அனைத்து வீரர்களும் காற்பந்து ஆட்டத்தை தமது தொழிலாகக் கருதி விளையாட இருப்பதோடு இவர்களுக்கு குறிப்பிடத்தக்க மாதாந்த சம்பளம் வழங்கினால் வழங்கப்பட வேண்டும் இந்தச் சுற்றுப் போட்டி covid-19 வைரஸ் பாதிப்பால் சில தடவைகள் ஒத்தி வைக்கப் பட்டிருந்தாலும் இந்த முறை சில திருத்தங்களுடன் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன எனப்படும்.
சுப்பர் லீக் முன்னோட்ட ரீதியான போட்டிகள் பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் மார்ச் 8ஆம் திகதி வரை இரண்டு குழுக்களில் நடத்தப்பட உள்ளன இதன் பின்னர் ஏப்ரல் மாதம் வரை இலங்கை தேசிய அணியின் சர்வதேச போட்டிகளுக்காக ஒரு இடைவெளி வழங்கப்பட உள்ளதுடன் அடுத்த கட்டமாக ஏப்ரல் 18ஆம் திகதி முதல் சூப்பர் லீக் சுற்று போட்டிகளில் உத்தியோகபூர்வமான போட்டிகள் ஆரம்பமாக உள்ளன. அதன் பின்னர் ஜூன் மாதம் முற்பகுதியில் ஒரு சர்வதேச இடைவெளியுடன் மீண்டும் ஜூலை மாத இறுதியில் இந்த சுற்றுப் போட்டிகள் முடிவடையவுள்ளன.
சுற்றுப்போட்டியில் புள்ளிகளின் அடிப்படையில் அதிக புள்ளிகளைப் பெற்ற கழகம் சாம்பியனாக (லீக் முறைமை) முடிசூட உள்ளது. இந்த சுப்பர் லீக் போட்டிகளின் மூலமாக இலங்கை தேசிய அணிக்கும் ஏனைய வளர்ந்துவரும் வீரர்களுக்கு சர்வதேச ரீதியான அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கபெறும் அதோடு மட்டுமல்லாது இந்த சுப்பர் லீக் கருவமைப்பு ஒரு போட்டி மட்டுமன்றி கால்பந்தாட்டத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய ஒரு முயற்சியாக அமையும். இதன் மூலம் 300க்கும் அதிகமான வீரர்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கப் பெறுவதுடன் 350 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான காற்பந்து பொருளாதாரத்தை வழங்கும் ஒரு அபிவிருத்தி முயற்சியாக இது இயங்கவுள்ளதாக இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் ஜஸ்வர் எமக்கு தெரிவித்தார்.
சுப்பர் லீக் போட்டிக்கு தகுதி பெற்ற 10 கழகங்கள்
1. Blue Eagles (முன்னாள் விமானப்படை அணி )
2. Blue Star – Kalutara
3. Colombo FC
4. Defenders FC (முன்னாள் இராணுவப்படை அணி )
5. New Youngs – Wennappuwa
6. Ratnam FC – Colombo
7. Renown – Colombo
8. Sea Hawks (முன்னாள் கடற்படை அணி)
9. Red Star – Panadura
10. Upcountry Lions – Nawalapitiya
எதிர்வரும் காலங்களில் இந்த 10 அணிகள் இரண்டு அணிகளாக அதிகரிக்கப்பட உள்ளதாகவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.