Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தொடர்ந்தும் தடுமாறும் இலங்கை வலுவான இணைப்பாட்டத்துடன் இங்கிலாந்து

தொடர்ந்தும் தடுமாறும் இலங்கை வலுவான இணைப்பாட்டத்துடன் இங்கிலாந்து

4 minutes read

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் மொத்தமாக 12 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன.

அதன்படி இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் 10 விக்கெட்டுகளையும், இலங்கை பந்து வீச்சாளர்கள் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரம் பெற, பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை பெற்றள்ளது.

அதனால் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை கடக்க இங்கிலாந்து அணிக்கு இன்னும் எட்டு ஓட்டங்கள் மாத்திரம் தேவை என்ற நிலை உருவாகியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இலங்கை அணியுடன் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

தொடரின் முதல் போட்டியானது நேற்றைய தினம் காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமானது. 

போட்டியில் நாணய சுழற்சி மேற்கொள்ளப்படுவதற்கு முன்னதாக இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் அணியின் தலைமைப் பொறுப்பு தினேஷ் சந்திமாலிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கியது.

ஆரம்ப வீரர்களாக லஹிரு திரமான்ன மற்றும் குசல் பெரேரா ஆகியோர் களமிறங்கி துடுப்பெடுத்தாடிவர 7 ஆவது ஓவருக்காக இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார்.

அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் திரிமான்ன 4 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, குசல் மெண்டீஸ் களமிறங்கினார்.

தென்னாபிரிக்காவுடனான மூன்று இன்னிங்ஸுகளிலும் டக்கவுட்டுடன் ஆட்டமிழந்த அவர் இந்த இன்னிங்ஸில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏற்பட்ட கலங்கத்தை துடைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் அவர் அதே ஓவரின் ஐந்தாவது பந்து வீச்சில் விக்கெட் காப்பாளரான ஜோஸ் பட்லரின் பிடிகொடுத்து, தொடர்ந்து நான்காவது முறையாகவும் டக்கவுட்டுடன் வெளியேறினார்.

அடுத்தபடியாக குசல் பெரேரா 20 ஒட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி 25 ஓவர்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் இடைக்கால அணித் தலைவர் தினேஷ் சந்திமால் ஆகியோர் சரிவிலிருந்த இலங்கை அணியை மீட்க பெரிதும் போரடி வந்தனர்.

மதிய உணவு வரை தங்கள் விக்கெட்டுகளை இவர்கள் பாதுகாத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 65 ஆக உயர்த்தினர். எனினும் அணிக்கு அவர்கள் வழங்கிய பாதுகாப்பு எல்லாம் மதிய உணவு இடைவேளையின் பின்னர் உடைத்தெறியப்பட்டது.

அதன்படி இந்த போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்ட ஸ்டூவர்ட் பிராட்டின் மூன்றாவது விக்கெட்டாக மெத்யூஸ் 27 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற தினேஷ் சந்திமாலும் 28 ஓட்டங்களுடன் சாம் குர்ரனின் பந்து வீச்சில் ஜாக் லீச்சிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

அதனால் இலங்கை அணி 81 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்தது. தொடர்ந்து இலங்கை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய 46.1 ஓவரில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்து 135 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இலங்கையில் நடந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மிகக் குறைந்த ஓட்டத்துடன் இலங்கை அணி ஆட்டமிழந்த நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இங்கிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் டோம் பெஸ் 5 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகளையும் மற்றும் ஜாக் லீச் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸுக்காக இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய டொமினிக் சிபிலி மற்றும் ஜாக் கிராலி ஆகியோரை குறைந்த ஓட்டத்துடன் லசித் எம்புலுதெனிய ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார்.

டொமினிக் சிபிலி 5 ஆவது ஓவரின் இரண்டாவது பந்து வீச்சில் நான்கு ஓட்டத்துடன் திரிமான்னவிடம் பிடிகொடுத்து வெளியேற, ஜாக் கிராலி 9 ஆவது ஓவரின் நான்காவது பந்து வீச்சில் வனிந்து ஹசரங்கவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணியின் முதல் இரு விக்கெட்டுகளும் 17 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. எனினும் மூன்றாவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் ஜோ ரூட் மற்றிம் ஜோனி பெயர்ஸ்டோ ஆகியோர் ஜோடி சேர்ந்து வலுவான இணைப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதனால் இங்கிலாந்து அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை குவித்துள்ளது.

ஜோ ரூட் 5 பவுண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்களுடனும், பெயர்ஸ்டோ 2 பவுண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More