இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலத்திற்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் 9 வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், குறித்த ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை ஐ.பி.எல். நிர்வகாம் வெளியிட்டுள்ளது.
குறித்த வீரர்கள் பட்டியலில் இலங்கை அணி சார்பாக குசல் பெரேரா, திசர பெரேரா, வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, தசுன் ஷானக மற்றும் இசுரு உதான ஆகியோருக்கான குறைந்தபட்ச ஏலத்தொகை இந்திய ரூபாவில் 50 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், மஹீஸ் தீக்ஷன, கெவின் கொத்திகொட மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஏலத்தொகையாக 20 இலட்சம் ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இம்முறை அதிகபட்சமாக ஐ.பி.எல். ஏலத்தில் ஹர்பஜன் சிங், கேதர் ஜாதவ், க்ளென் மெக்ஸ்வேல், ஸ்டீவ் ஸ்மித், சகிப் அல் ஹசன், மொயீன் அலி, செம் பில்லிங்ஸ், லியம் ப்ளங்கட், ஜேசன் ரோய் மற்றும் மார்க் வூட் ஆகியோருக்கு 2 கோடி ருபாய் குறைந்தபட்ச ஏலத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 18 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு சென்னையில் ஆரம்பிக்கவுள்ளதுடன், இதில் 164 இந்திய வீரர்கள், 128 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 3 அங்கத்துவ நாட்டு வீரர்கள் என 292 வீரர்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.