அவுஸ்திரேலிய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு: 20 போட்டி ஆக்லாந்தில் இருந்து வெலிங்டனுக்கு மாற்றப்பட்டுள்ளது.
புதிய கொவிட் மாறுபாட்டின் பரவல் காரணமாக ஆக்லாந்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள முடக்கல் நிலை காரணமாகவே இவ்வாறு ஆட்டம் வெலிங்டனுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதேநேரம் மார்ச் 03 மற்றும் 05 ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ள இருபதுக்கு : 20 தொடரின் மூன்றாவதும் நான்காவதுமான போட்டி வெலிங்டனில் மூடிய கதவுகளுக்கு பின்னால் விளையாடப்படும் என்று நியூஸிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியானது நியூஸிலாந்து அணியின் 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதில் நடைபெற்று முடிந்த இரு போட்டிகளையும் நியூஸிலாந்து அணி வெற்றி கொண்டு 2:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதேவேளை நியூஸிலாந்திற்கான இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணமும் ஆக்லாந்தின் புதிய முடக்கல் நிலையினால் பாதிப்படைந்துள்ளதுடன், இடமாற்றத்துக்கு வழிவகுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.